ஆமைக்கு யானை பலம்!
ஆமை ஒன்றை யானை மிதித்துச் சென்றது. கனத்த ஓட்டின் காரணமாக ஆமை நசுங்கி விடவில்லை.
ஆமை யானையிடம் சொன்னது, “நான் உன்னளவுக்கு பலசாலி”
இதைக் கேட்ட யானை ஏளனமாகச் சிரித்தது.
ஆமை, யானையிடம் மலையில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மறுநாள் காலை வந்தால், தான் பலசாலி என்பதை நிரூபிப்பதாகக் கூறியது.
இதற்கு யானையும் ஒப்புக் கொண்டது.
ஆமை அடுத்து ஒரு நீர் யானையிடம் சென்றது. அதனிடம் தான் அதற்கு இணையான பலசாலி என்றும் மறுநாள் காலை நீர் யானை அதன் குளத்தில் இருந்தால் நிரூபிப்பதாகக் கூறியது.
நீர் யானையும் சிரித்துக் கொண்டே சம்மதித்தது.
ஆமை நீண்ட ஒரு கயிறை தயார் செய்தது.
மறுநாள் காலை அது நீர்யானையிடம் சென்று கயிறின் ஒரு முனையைக் கொடுத்துவிட்டு, தான் தயார் என்று சொன்னவுடன் கயிற்றை இழுக்குமாறு சொல்ல நீர்யானையும் சரி என்றது.
பின் விரைவாக மலைக்கு சென்று யானையிடம் மறு நுனியைக் கொடுத்து விட்டு, தான் தயார் என்று சொன்னவுடன் இழுக்கக் கேட்டுக் கொண்டது.
யானையும் ஒப்புக் கொண்டது.
பின் ஆமை இருவர் கண்ணிலும் படாதவாறு ஒரு இடத்தில் நின்று கொண்டு தயார் என்றது.
யானையும், நீர்யானையும் கயிறை இழுக்க ஆரம்பித்தன. இரண்டும் சம அளவு பலம் உடையதால் நீண்ட நேரம் இழுத்தும் யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. களைப்பினால் இரண்டும் கயிறை விட்டு விட்டன.
இரண்டுமே அடுத்த முனையில் ஆமை தான் இருந்தது என்று நம்பி ஆமைக்கு தங்கள அளவுக்கு பலம் இருப்பதை ஒத்துக் கொண்டன.