கனவில் வந்த அம்மா...!

நேற்றைய பகலும் இரவும்
எனக்கேனோ விரக்தியை
அள்ளி விதைத்துச் சென்றிருந்தது...!

யார் வரவுக்கோ காத்திருந்த கண்கள்
உறக்கம் தொலைத்து
மயக்கம் கொண்டு
ஆழ்நிலை சென்றிருந்தன...!

நுணலும் துயிலுமந்த
நட்டநடு ஜாமத்திலே
தெளித்து விட்ட பனித்துளியாய்...
வருடிச் செல்லும்
தென்றலாய் வந்தாள் அவள்...!
எதிர்பாரா தருணத்தில்
எதிர்பார்த்த ஒன்றை
தந்துவிட்டுச் புன்னகைத்தாள்...
என் நெற்றியில் ஈரம்...!

வாஞ்சையோடு உச்சி மோர்ந்தவள்
கைகளின் அணைப்புக்குள்ளே
ஆசை ஆசையாய் அடைக்கலமாகி,
அவள் மார்பில் முகம் புதைத்து
அவள் வாசம் உயிரில் தாங்கி
"அம்மா"வென கேவினேன் நான்...!

இத்தனை நாள் பிரிவும்
என் உயிரை சக்கையாய் பிழிந்து போட்டிருக்க...
திமிர் மட்டும் அடங்காமல்
முறைத்துக் கொண்டே அழுகை தொடர
என்றுமே வீசும் அந்த குரும்புன்னகையை
என்மீது வீசினாள் அவள்...!

என்னை தவிக்க விட்டு சென்றவள் தானே நீ...!
வீம்பாய் விலக எத்தனித்தவளை
விடாப்பிடியாய் இழுத்தணைத்து தலை கோதி
"விலகினேன் என ஏன் நினைத்தாய்?"
வினவிய அவளிடத்தில் கொடுக்க
பதிலில்லை என்னிடம்...!

என் உள்ளங்கை ரேகை பிடித்து
கண்களுக்குள் அவளென்னை படிக்க முயல
மவுனமாய் நானும் சொல்லிக்கொண்டேன்
எதிர்பார்ப்புகளற்ற என் அன்பின்
மிச்சமாயிருப்பவள் நீ மட்டும் தானே என்று...!

எழுதியவர் : (5-Nov-12, 3:52 pm)
பார்வை : 356

மேலே