எஞ்சிய வினாக்கள்

சாலை விபத்தில் இறந்தவனிடமிருந்து
தவறிய வண்ணத்தாள் சுற்றிய பரிசுப்பொருள்
இனி உரியவரிடம் அளிக்கப்படுமா?
நல்வாழ்த்துக்களையும் தன் பிரியத்தையும்
தெரிவித்தவனின் உறைந்த உதிரத்தின்
வண்ணத்தையே வண்ணத்தாளும் கொண்டிருந்தது
பரிசுக்குரியவரின் வேதனையை
இது மேலும் அதிகப்படுத்திடாதா?
ஆதலால் பரிசுப்பொருளை கைபற்றி விடலாமா?
பரிசுதருவதை முன்னரே அறிவித்திருந்தால்
இல்லாதவனின் நினைவை அது கிளறிடுமா?
பரிசளித்து விட்டு வேறொரு நாளில்
இவன் மரித்திருக்கலாம் அல்லவா?
எண்ணற்ற கேள்விகளையும் ஒரு பரிசுப்பொருளையும் விட்டு செல்கிறது
இவன் மரணம்

எழுதியவர் : சாய்ஸ்ரீ (30-Dec-12, 4:54 pm)
பார்வை : 149

மேலே