அலை எனக்கு குளிர்தாங்கவில்லை உனக்கு கம்பளி போர்த்துகிறேன் நீ...
அலைஎனக்கு குளிர்தாங்கவில்லை
உனக்கு கம்பளி போர்த்துகிறேன்
நீ சினங்கொண்டால்
உன் இருதயம் தாங்காதே
அமைதியுருகிறேன்
உனக்கு பிடிக்குமென்பதால்
என்னை தாழ்த்திக்கொள்கிறேன்
எங்கேயும் உன்னோடிருந்தால்
மகிழ்வாய் என்பதால்
உன்னுடனேயே இருக்கிறேன்
ஒரு துறவிக்கு எதற்கு மகுடம்
என உனக்குச் சூடி அழகு பார்க்கிறேன்
எல்லா காலங்களிலும் உன்
கண்களில் கவலையை காண்கையில் நான்
கவலையில் ஆழ்கிறேன்
நீயும் நானும் கடற்கரையில்
கால் நனைக்கச் சென்றோம்
உன் கரம் பற்றி நிற்கிறேன்
இறுக்கிப் பிடிக்கிறீர்கள் என கரம் உதறி
சுதந்திரமாய் வாழவிடுங்கள்
என்ற ஒரு சொல்லோடு
கரையை நோக்கி வேகமாய் நடக்கிறாய்
எங்கோ தவறிழைத்து விட்டோமா
என கலங்கி நிற்கிறேன்
ஓயாத சத்தத்துடன்
மனதிற்குள் அடிக்கிறது அலை .
Posted by MULLAI RAJAN KAVITHAIGAL - முல்லை ராஜன் கவிதைகள்