எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கணினியின் பயன் இன்றைய அறிவியல் வளர்ச்சியில் மனிதனின் வாழ்வோடு...

கணினியின் பயன்

இன்றைய அறிவியல் வளர்ச்சியில் மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள் என்னவெனில் கணினி எனலாம். மனித வாழ்க்கையில் கணினி பரவாத இடம் ஏதுமில்லை. கணினி மனிதனுக்குப் பல வகைகளில் பயனான ஒன்றாக விளங்குகிறது. கல்வி, மருத்துவம், போக்குவரத்து, அன்றாட அலுவலகப்பணிகள் மற்றும் ஏனையத் துறைகளிலும் கணினியின் கையே மேலோங்கி நிற்கிறது.       

கல்வித்துறையில் கணினியின் பங்கை யாரும் மறுக்க முடியாது. தற்போது எல்லா பள்ளிகளிலும் கணினி வழிக்கல்வி பெரிதும் வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக, அறிவியல் கணிதப் பாடங்களுக்காக பள்ளிகளில் மடிக்ககணினிகள்,ஒளியிழை வட்டுகள், பாட செறிவட்டுகள், போன்றவை கல்வி அமைச்சால் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களும் அறிவியல், கணிதப் பாடங்களை இவற்றின் மூலம் மாணவர்களுக்குப் போதிக்கின்றனர்.  மேலும், கணினியின் அவசியத்தையும் தகவல் தொழில் நுட்பத்தையும் நன்கு அறிந்துள்ள அரசாங்கம், பள்ளிகளில் கணினி மையங்களையும் அமைத்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும், பல கோடி வெள்ளியை அரசாங்கம் செலவு செய்வது கணினியின் அவசியத்தை உணர்த்துகிறது.

மருத்துவத்துறையிலும் கணினி பெரும் பங்காற்றுகிறது. தற்போது, நோய்களுக்கான காரணங்கள், அதற்கான ஆய்வுகள், மருந்துகள் போன்றவற்றிற்குக் கணினியின் உதவி பெருமளவில் நாடப்படுகிறது. உடலில் உள்ள நோய்களைக் கணினியின் மூலமே ஆய்ந்து, கண்டுபிடிக்கின்றனர். எடுத்துக்காட்டாக, ‘சிட்டி ஸ்கேன்’ எனப்படும் இயந்திரத்தின் வழி, தலையில் ஏற்படும் பிரச்சினைகளை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியும். மேலும், அறுவை சிகிச்சை போன்றவற்றிற்கும் கணினியே பெருமளவில் உற்ற நண்பனாய் விளங்குகிறது.         

இன்றைய நவீன காலத்தில் கணினி உலகையே சுருக்கிவிட்டது என கூறினால் அது மிகையாகாது. மின்னஞ்சல், இணையம் என்பதன் வழி உலகின் எந்த மூலையையும் நாம் எளிதில் தொடர்பு கொள்ள முடியும். நம் உறவினர்களோ அல்லது நண்பர்களோ, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கணினியின் மூலம் அவர்கள் முகத்தைப் பார்த்து, நேரடியாக உரையாட முடியும். இணையத்தின் வழி எத்தகைய தகவலையும் நம்முடைய விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியும். இது, மாணவர்கள் மட்டுமன்றி, எல்லாத் துறையினருக்கும் பெரும் பயனாய் அமைகிறது.

அலுவலகப் பணிகளுக்கும் கணினியின் பயன் அளவிடற்கரியதாகும். அலுவலகக் கோப்புகளையும் ஊழியர்களின்  விவரங்களையும் விரல் நுனியில் வைத்துக் கொள்வதற்குக் கணினி பெரும் துணைபுரிகிறது. கடிதங்களைத் தயாரித்தல், ஊழியர்களின் வரவு செலவு, சம்பளம் போன்றவற்றைத் தாயாரித்தலிலும் கணினி உதவுகிறது. தனக்கு வேண்டிய தவகல்களை உடனே தர கணினியால் மட்டுமே முடியும். மேலும், தகவல்களை இரகசியமாக வைத்துக் கொள்ள கடவுச்சொல்லையும் கணினியில் வைத்துக் கொள்ளலாம். இதன்  மூலம் மற்றவர்கள் தவகல்களைத் திருடுவது கடினமாகும்.        

கணினியின் பயனை வெறும் வார்த்தைகளால் மட்டுமே விவரிக்க முடியும் என்பது மலையை முடியால் அளப்பது போன்றதாகும். எந்தத் துறையால் கணினி தன் ஆதிக்கத்தைச் செலுத்தவில்லை என்று யாராலும் கூற முடியாது. எனினும், நாணயத்திற்கு உள்ள இரு பக்கங்களைப் போல் கணினிக்கும் தீமை என்ற மறு பக்கம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. எனவே, நன்மையை மட்டுமே நாடினால் எதுவுமே நன்மையாகத்தான் முடியும்.

பதிவு : ராஜ்குமார்
நாள் : 3-Oct-17, 12:25 pm

மேலே