புறநானூறு பாடல் 19 - பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

இப்பாண்டியனது இயற்பெயர் நெடுஞ்செழியன் ஆகும். இவன் சிறுவதிலேயே பாண்டிய நாட்டுக்கு மன்னனாக முடிசூட்டப்பட்டான். இவன் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில் முடிவேந்தர்கள் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை மற்றும் வேளிர்கள் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள் மற்றும் பொருநன் ஆகிய எழுவரை தலையாலங்கானத்தில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்று இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று சிறப்பிக்கப்பட்டான்.
இப்பாடலைப் பாடிய ஆசிரியர் குடபுலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங் கானத்துச் செருவென்று வந்தபின் அவனைக் காண வந்தார். அவரையும் அவன் அன்போடு வரவேற்றுத் தழுவிக் கொண்டான். அவனால் தழுவப் பெற்ற இச்சான்றோர் அவனது பேரன்பை வியந்து, ‘செழிய! நின் மார்பு புலியைப் படுப்பது குறித்து வேட்டுவன் கல்லிடத்தே சேர்த்திய அடாரையும் ஒக்குமென்று கருதிப் புல்லினேன்; எம் போல்வார்க்கு இன்பமும் பகைவர்க்குத் துன்பமும் பயப்பது நின் மார்பு’ என்று பாராட்டி, அவனது போர்ச் செயலைச் சிறப்பித்து உரைக்கின்றார்.
இனி பாடலைப் பார்ப்போம்.
இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
மன்னுயிர்ப் பன்மையுங் கூற்றத் தொருமையும்
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய
இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய 5
பெருங்கல் லடாரும் போன்மென விரும்பி
முயங்கினே னல்லனோ யானே மயங்கிக்
குன்றத் திறுத்த குரீஇயினம் போல
அம்புசென் றிறுத்த வரும்புண் யானைத்
தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து 10
நாஞ்சி லொப்ப நிலமிசைப் புரள
எறிந்துகளம் படுத்த வேந்துவாள் வலத்தர்
எந்தையொடு கிடந்தோரெம் புன்றலைப் புதல்வர்
இன்ன விறலு முளகொ னமக்கென
மூதிற் பெண்டிர் கசிந்தழ நாணிக் 15
கூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை
எழுவர் நல்வலங் கடந்தோய்நின்
கழூஉவிளங் காரங் கவைஇய மார்பே.
பதவுரை:
இமிழ் கடல் வளைஇய – ஒலிக்கும் கடலால் சுற்றிச் சூழப்பட்ட
ஈண்டு அகன் கிடக்கை – அணுச் செறிந்த வளமான அகன்ற இப்பூமியில்
ஈண்டு – செறிவு (to get to be a compact mass, as the atoms of earth)
தமிழ் தலை மயங்கிய தலையாலங்கானத்து – தமிழ்ப்படை கைகலந்து போரிட்ட தலையலங் கானத்தில்
மன்னுயிர்ப் பன்மையும் – நிலைபெற்ற பலமடங்கும் உயிர்களையும்
கூற்றத்து ஒருமையும் – அவ்வுயிர்களைக் கொல்லும் கூற்றம் ஒன்றே என்பது போல
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய – உன்னோடு சீர்தூக்கின் நீ ஒருவனே நின்று பகைவரை சலிக்காமல் வெல்லும் வேலையுடைய செழிய!
இரும் புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய – பெரும் புலியைப் பிடிக்கும் வேடன், பாறைகள் செறிந்த குன்றுகளில் முழைகள் (குகைகள்) இருக்குமிடம் அறிந்து, அவற்றின் வாயிலில்
பெருங்கல் அடாரும் போன்ம் என விரும்பி – கற்பலகையால் கதவமைத்து, உள்ளே ஆடுகளைக் கட்டி புலிகளை அதனுள் புகுவித்து, அவைகளைப் பிடிக்கும் பொறி போன்றது என விருப்பபட்டு
(அடார் – கருங்கற் பாறைகளின் இணைப்பு, விலங்குகளை அகப்படுத்தும் பொறி, Trap for tigers and other animals)
முயங்கினென் அல்லனோ யானே – தழுவினேன் அல்லவோ நான்!
மயங்கிக் குன்றத் திறுத்த குரீஇயினம் போல – கலங்கி மலையிலே தங்கிய குருவியினம் போல
அம்பு சென்று இறுத்த அரும்புண் யானை – அம்பு சென்று தைத்ததால் ஏற்பட்ட வேதனை பொறுக்க வியலாத புண்களையுடைய யானைகளின்
தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து – துளைகளையுடைய தும்பிக்கைகள் வாயுடனே வெட்டி வீழ்ந்து
நாஞ்சில் ஒப்ப நிலமிசைப் புரள – கலப்பையைப் போல நிலத்தின் மீது கிடந்து புரள
எறிந்து களம் படுத்த – வெட்டிப் போர்க்களத்தில் வீழ்த்த
ஏந்து வாள் வலத்தர் – ஏந்திய வாள் வெற்றியை உடையோராய்
எந்தையொடு கிடந்தோர் எம் புன் தலைப் புதல்வர் – எம் தலைவனோடு கிடந்தார் எம்முடைய புல்லிய தலையையுடைய மைந்தர்கள்
இன்ன விறலும் உளகொல் நமக்கு என – இப்படிப் பட்ட வெற்றியும் உண்டோ நமக்கு என்று சொல்லி
மூதிற் பெண்டிர் கசிந்து அழ – பழைய மறக்குடிப் பெண்டிர் இன்புற்று உவகையால் அழ
நாணி கூற்றுக் கண்ணோடிய – அது கண்டு நாணி கூற்றம் இரங்கிய
வெருவரு பறந்தலை – அஞ்சத்தக்க போர்க் களத்தில்
எழுவர் நல் வலம் கடந்தோய் – இரு பெரு வேந்தரும், ஐம்பெரும் வேளிருமாகிய வலிமையான எழுவரையும் வென்றவனே!
நின் கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே – உனது கழுவி விளங்கிய முத்தாரம் அணிந்த மார்பினையே
பொருளுரை:
ஒலிக்கும் கடலால் சுற்றிச் சூழப்பட்ட அணுச் செறிந்த வளமான அகன்ற இப்பூமியில் தமிழ்ப்படை கைகலந்து போரிட்ட தலையலங் கானத்தில் நிலைபெற்ற பலமடங்கும் உயிர்களையும் அவ்வுயிர்களைக் கொல்லும் கூற்றம் ஒன்றே என்பது போல உன்னோடு சீர்தூக்கின் நீ ஒருவனே நின்று பகைவரை சலிக்காமல் வெல்லும் வேலினையுடைய செழிய!
கலங்கி மலையிலே தங்கிய குருவியினம் போல அம்பு சென்று தைத்ததால் ஏற்பட்ட வேதனை பொறுக்கவியலாத புண்களையுடைய யானை களின் துளைகளையுடைய தும்பிக்கைகள் வாயுடனே வெட்டி வீழ்ந்து கலப்பையைப் போல நிலத்தின் மீது கிடந்து புரள வெட்டிப் போர்க் களத்தில் வீழ்த்த ஏந்திய வாள் வெற்றியை உடையோராய் எம் தலைவனோடு கிடந்தார் எம்முடைய புல்லிய தலையையுடைய மைந்தர்கள்.
இப்படிப்பட்ட வெற்றியும் உண்டோ நமக்கு என்று சொல்லி மறக்குடிப் பெண்டிர் இன்புற்று உவகையால் அழ, அது கண்டு நாணி கூற்றம் இரங்கிய அஞ்சத்தக்க போர்க்களத்தில் இரு பெரு வேந்தரும், ஐம்பெரும் வேளிருமாகிய வலிமையான எழுவரையும் வென்றவனே!
பெரும் புலியைப் பிடிக்கும் வேடன், பாறைகள் செறிந்த குன்றுகளில் முழைகள் (குகைகள்) இருக்குமிடம் அறிந்து, அவற்றின் வாயிலில் கற்பலகையால் கதவமைத்து, உள்ளே ஆடுகளைக் கட்டி புலிகளை அதனுள் புகுவித்து, அவைகளைப் பிடிக்கும் பொறி போன்றது என விருப்பபட்டு, உனது கழுவி விளங்கிய முத்தாரம் அணிந்த மார்பினைத் தழுவினேன் அல்லவோ நான்!
திணை: இப்பாடல் வாகைத்திணை ஆகும். வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது வாகைத்திணை. ’தலையாலங்கானத்து மன்னுயிர்ப் பன்மையுங் கூற்றத் தொருமையும் நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய’ என்பதிலிருந்தும், ’கூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை எழுவர் நல்வலங் கடந்தோய்’ என்பதிலிருந்தும் பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் வீரம் புலப்படுகிறது.
துறை: அரசவாகை ஆகும்.
1. அரசனது இயல்பையோ, வெற்றியையோ எடுத்துரைத்தல் அரசவாகைத் துறையாகும்.
2. ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்குதல், குடியோம்புதல் ஆகிய ஐந்தும் அரச வாகை எனப்படுகிறது.
3. அரசவாகையில் பிறரை நோகச் செய்யாத பண்பு, கொடைத்திறம், நாட்டின் பரப்பு, நாட்டுமக்கள் அச்சமின்றி வாழ்தல், நாட்டில் விழா, வீரம், பகைவர் அச்சம், பகைவர் திறை தருதல், பகைநாட்டு அழிவு, வேள்வி செய்தல் முதலான செய்திகள் கூறப்படுகின்றன.
’பறந்தலை எழுவர் நல்வலங் கடந்தோய்நின் கழூஉவிளங் காரங் கவைஇய மார்பே! பெருங்கல் லடாரும் போன்மென விரும்பி முயங்கினே னல்லனோ யானே!’ என குடபுலவியனார் பாண்டியனின் அன்பையும், பண்பான இயல்பையும் குறிப்பிடுவதால் இது அரசவாகைத் துறையாகும்.