பிணம் எரிக்கும் நாளைய பிணங்கள்..!! (Mano Red )

மயானம் நோக்கி வருகிறான்
மரித்துப் போன மனிதன்,
அமைதியை விரும்பாதவனுக்கு
அந்த மயான அமைதி புதிது தான்..!!

வாழ்வில் துளியும் ரசிக்காதவனுக்கே
ரசனை கொண்ட ஓல ஒப்பாரியும்,
நையாண்டி மேளமும்,
தாரை தப்பட்டை சங்கு சத்தமும்
வான வேடிக்கைகளும்...!!

கூச்சல் போட்டு ஆடியவனை,
கூட்டம் சேர்ந்து ஆடிப்பாடி
ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்து
அமரர் ஆக்கி அடக்குகின்றனர்..!!

பணமும் பதவியும் பெற்று தந்த
புகழ் பெயரெல்லாம்,
அவன் பிணம் ஆனவுடன்
உடன் கட்டை ஏறி இறந்து விடுகிறது..!!

அண்டம் புகழ வலம் வந்தவன்,
அடைக்கலம் சேர மயானம் வந்தால்,
அண்ணாக்கயிறு கூட மிச்சமின்றி
அறுத்து எரிக்க படுகிறான்..!!

செத்த பிணத்தை கூடி நின்று
வேடிக்கை பார்க்கும்
நாளை சாக போகும் பிணங்கள்,
தங்கள் சாவின் முன்னோட்டம்
தெரிந்து கொள்கின்றனர்...!!

என்னவொரு விந்தை
பிணம் எரியும் அறைக்கு அருகிலே,
அடுத்து பிணமாக போகும்,
பிணம் எரிக்க வந்தவனின்
காத்திருக்கும் அறை..!!

மனிதனை நோக்கி சாவு வரவில்லை,
சாவை நோக்கியே மனிதன் செல்கிறான்..!!

எழுதியவர் : மனோ ரெட் (12-Aug-13, 12:18 pm)
பார்வை : 296

மேலே