புறநானூறு பாடல் 34 - சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

(சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் - அறிமுகம் காண்க)

இப்பாடலின் ஆசிரியர் ஆலத்தூர் கிழார் சோழநாட்டில் உள்ள ஆலத்தூர் என்ற ஊரைச் சார்ந்தவர் என்பதுடன், வேளாண் மரபினராகவும் இருந்ததால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம்.

இப்பாட்டில் இவர், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனிடம் பெருஞ்செல்வம் பரிசில் பெற்றுச் செல்லும் தன்னை, அவன் ‘எம்மை நினைத்து மறுபடியும் வருவீரோ?’ என்று கேட்க, 'அழகிய ஆபரணங்களையணிந்த பெண்ணின் கணவனே! பசுவின் பால் தரும் முலையை அறுத்து, முலையாற் பெறும் பயனைக் கெடுத்த தீவினை யாளர்க்கும் சிறந்த ஆபரணங்களை அணிந்த பெண்களின் கர்ப்பத்தை அழித்தோர்க்கும் பார்ப்பனர்கள் வருந்த கொடுமை செய்தோர்க்கும் அவரவர் செய்த பாதகத்தினை ஆராய்ந்து அவற்றைப் போக்கும் பிராயச்சித்தமும் உண்டு என்றும், நிலநடுக்கத்தால் நிலமே மேடு பள்ளமாக, பள்ளம் மேடாக பெயர்வதானாலும் ஒருவன் செய்த உதவியை மறந்து கொன்றோர்க்கு அவற்றின் விளைவுகளிலிருந்து பிழைக்கும் வழி இல்லை என்றும் அறநூல்கள் கூறுகின்றன.

புன்செய் நிலத்தில் விளைந்த புறாவின் கருவாகிய முட்டை போன்ற வரகினது அரிசியை பால் விட்டு சமைத்த சோற்றில் தேனும் கலந்து இளமுயலின் கொழுத்த சுடப்பட்ட இறைச்சியைத் தின்ற என் சுற்றத்தோடு இலந்தை மரங்கள் நிறைந்த அகன்ற பொது வெளியிடத்தில் கள்ளமில்லா உள்ளத்துடன் வேண்டிய இன்சொற்களைப் பலவாறாகப் பேசியபடி பெரிய கட்டியாக வழங்கிய சுவைமிகுந்த சோற்றைப் பாணர்கள் உண்பார்கள்.

அவர்களுக்கு நீங்காத செல்வம் எல்லாம் முழுமையாகக் கொடுத்தவன் எங்களுடைய வேந்தனாகிய வளவன் வாழ்வானாக என்று சொல்லி அதிகாலையிலும் மாலை வேளையிலும் உனது பெருமை பொருந்திய வலிய திருவடிகளைப் பாடவில்லை என்றால் பல கதிர்களையுடைய செல்வனாகிய கதிரவன் தோன்றமாட்டான்.

பெருமானே, நானோர் எளியவன்! இவ்வுலகில் நற்குணங்கள் அமைந்த சான்றோர்கள் செய்த நல்ல செயல்கள் உண்டாயின் இமயமலையில் திரண்டு இனிய ஓசையுடன் கீழ்க்காற்றால் வரும் பெருத்த மழை சொரிந்த நுண்ணிய பல துளிகளை விட பல காலம் நீ வாழ்வாயாக! என்று ஆலத்தூர்கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை வாழ்த்துகின்றார்.

இனி பாடலைப் பார்ப்போம்.

ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென
நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன் 5

செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென
அறம்பா டிற்றே யாயிழை கணவ
காலை யந்தியு மாலை யந்தியும்
புறவுக் கருவன்ன புன்புல வரகின்
பாற்பெய் புன்கந் தேனொடு மயக்கிக் 10

குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த வொக்கலொ
டிரத்தி நீடிய வகன்றலை மன்றத்துக்
கரப்பி லுள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி
அமலைக் கொழுஞ்சோ றார்ந்த பாணர்க்
ககலாச் செல்வ முழுவதுஞ் செய்தோன் 15

எங்கோன் வளவன் வாழ்க வென்றுநின்
பீடுகெழு நோன்றாள் பாடே னாயிற்
படுபறி யலனே பல்கதிர்ச் செல்வன்
யானோ தஞ்சம் பெருமவிவ் வுலகத்துச்
சான்றோர் செய்த நன்றுண் டாயின் 20
இமயத் தீண்டி யின்குரல் பயிற்றிக்
கொண்டன் மாமழை பொழிந்த
நுண்பஃ றுளியினும் வாழிய பலவே.

பதவுரை:

ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும் – பசுவின் பால் தரும் முலையை அறுத்து, முலையாற் பெறும் பயனைக் கெடுத்த தீவினையாளர்க்கும்

மாண் இழை மகளிர் கரு சிதைத்தோர்க்கும் – சிறந்த ஆபரணங்களை அணிந்த பெண்களின் கர்ப்பத்தை அழித்தோர்க்கும்

பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும் – பார்ப்பனர்கள் வருந்த கொடுமை செய்தோர்க்கும்

வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என – அவரவர் செய்த பாதகத்தினை ஆராய்ந்து அவற்றைப் போக்கும் பிராயச்சித்தமும் உண்டு என்றும்

நிலம் புடை பெயர்வ தாயினும் – நிலநடுக்கத்தால் நிலமே மேடு பள்ளமாக, பள்ளம் மேடாக பெயர்வ தானாலும்

ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென – ஒருவன் செய்த உதவியை மறந்து கொன்றோர்க்கு அவற்றின் விளைவுகளிலிருந்து பிழைக்கும் வழி இல்லை என்று

அறம் பாடிற்று - அறநூல்கள் கூறுகின்றன.

ஆயிழை கணவ - அழகிய ஆபரணங்களையணிந்த பெண்ணின் கணவனே!

காலை அந்தியும் மாலை அந்தியும் - அதிகாலை வேளையிலும் மாலை வேளையிலும்

புறவுக் கருவன்ன புன்புல வரகின் - புறாவின் கருவாகிய முட்டை போன்ற, புன்செய் தரிசு நிலத்தில் விளைந்த வரகினது அரிசியை

பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கி – பால் விட்டு சமைத்த சோற்றில் தேனும் கலந்து

புன்கம் – சோறு, (Boiled rice)

குறு முயற் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு – இளமுயலின் கொழுத்த சுடப்பட்ட இறைச்சியைத் தின்ற என் சுற்றத்தோடு கூட

இரத்தி நீடிய அகன்றலை மன்றத்து – இலந்தை மரங்கள் நிறைந்த அகன்ற பொது வெளியிடத்தில்
.
கரப்பில் உள்ளமொடு – கள்ளமில்லா உள்ளத்துடன்

வேண்டுமொழி பயிற்றி – வேண்டிய இன்சொற் களைப் பலவாறாகப் பேசியபடி

அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு – பெரிய கட்டியாக வழங்கிய சுவைமிகுந்த சோற்றை உண்ட பாணர்களுக்கு

அகலாச் செல்வம் முழுவதுஞ் செய்தோன் – நீங்காத செல்வம் எல்லாம் முழுமையாகக் கொடுத்தவன்

எங்கோன் வளவன் வாழ்க என்று – எங்களுடைய வேந்தனாகிய வளவன் வாழ்வானாக என்று சொல்லி

நின் பீடுகெழு நோன்றாள் பாடே னாயின் – உனது பெருமை பொருந்திய வலிய திருவடிகளைப் பாடவில்லை என்றால்

பல் கதிர்ச் செல்வன் படுபறி யலனே – பல கதிர் களையுடைய செல்வனாகிய கதிரவன் தோன்ற மாட்டான்

யானோ தஞ்சம் பெரும – நானோர் எளியவன் பெருமானே!

இவ் வுலகத்துச் சான்றோர் செய்த நன்று உண்டாயின் - இவ்வுலகில் நற்குணங்கள் அமைந்த சான்றோர்கள் செய்த நல்ல செயல்கள் உண்டாயின்

இமயத்து ஈண்டி இன்குரல் பயிற்றி – இமயமலை யில் திரண்டு இனிய ஓசையுடன்

கொண்டல் மாமழை பொழிந்த நுண்பல் துளியினும் பல வாழிய – கீழ்க்காற்றால் வரும் பெருத்த மழை சொரிந்த நுண்ணிய பல துளிகளை விட பல காலம் வாழ்வாயாக!

விளக்கம்: குரவர்த் தப்பிய என்பது பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும் என பரிமேலழகர் காலத்திலேயே திருத்தப்பட்டிருக்கிறது. ஒழுக்க முடைய சான்றோர் தீயவற்றை தன்னிலை அறியாமற்கூட வாயால் சொல்லாராதலால், சொல்லுமிடத்து அத்தீமையை மறைத்து வேறு படுத்திக் கூறுவது மரபு. எனவே ‘ஆன்முலயறுத்த’ என்றும், ’தப்பிய’ என்றும் ஆலத்தூர்கிழார் கூறினார்.

இப்பாடல் பாடாண்திணை ஆகும். பாடு + ஆண் + திணை. பாடுதற்குத் தகுதி உடைய ஓர் ஆண் மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது பாடாண்திணை.

அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன் எங்கோன் வளவன் என்று அரசனின் இயல்பைக் கூறுதலால் இப்பாடல் இயன் மொழித் துறை ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Aug-13, 12:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 2059

சிறந்த கட்டுரைகள்

மேலே