வேறு நிலாக்கள் 25 கவித்தாசபாபதி

மீண்டும் என் ஈடனுக்கு ...
***********************************

பட்டாம்பூச்சிகளை பறக்கவிடும்
இந்த மனமா
அருவருப்பாய் நெளிகிறது
ஒரு புழுவைப் போல
*
நாம்
நிர்வாணத்தை மறைக்க
அசிங்கங்களையே ஆடைகளாய்
உடுத்திக்கொண்டோம்

உறவுகளின்
நூலிழையில் - பெரும்
ஆசைகளைக்
கோர்த்தோம்

உண்மையின்
ரகசியங்களை
பாவங்களைப்போல்
மறைத்து வைத்தோம்

தர்மத்தை
சூதின் வாயில்
தின்ன கொடுத்தோம்..!

*
மலர்களைப் போல
இருந்திருக்கலாம்
மதங்களும் இனங்களும்
நமமை அண்டியிருக்காது

கண்ணீரைப் போல
சி்ந்தியிருக்கலாம்
பாவங்கள் நம்மை
தண்டித்திருக்காது

*
பிரிவினையாளர்கள், தீவிரவாதிகள்
குழநதைகளைக் கொல்பவர்கள்
இவர்களைக் கடந்து...

கற்பழிப்பு, கொலை
இனவெறி, வஞ்சனை
இவற்றைக் கடந்து...

மதங்கள் வளர்த்த
'மத'ங்களைக் கடந்து...

மனிதன் நடநதுவந்த
யுகங்களின் சுவடுகளையெல்லாம்
கடந்து...

***பின்னோக்கிப் போகலாம் - ஒரு
***புனிதவழி மனப்பயணம்

அதோ
ஆப்பிள்மரம் கனிந்த
ஈடன் தெரிகிறது
அங்கே நான்
ஆதாம் ஆகிறேன்

என் பிரியத்திற்குரிய ஏவாளே..!
நிர்மலமான நம் இதயங்களில்
மீண்டும் நச்சுவிதை விதைக்க
அதோ... அரவு வருகிறது

***அதை...
***என்ன செய்யலாம்..? (1995)

எழுதியவர் : கவித்தாசபாபதி (1-Mar-16, 1:37 am)
பார்வை : 139

மேலே