திருந்தாத உள்ளங்கள் !!
புரட்சிப் புரவிகள்
அநீதிப் புழுதிகளைக்கண்டு
மிரண்டு வரவில்லை……
புழுதிகளின்
வீராப்பு பேச்சுக்கு
மார்ட்தட்டி வாதாட
புரவிகள் விரும்பவில்லை….
அதோ…
கதிரவன் விழியில்
உழைத்திடும்
கருத்த மேனிகள்
பூமகள் மடியில்
குருதியை
வியர்வையாக சிந்திடும்
உரமேறிய கரங்கள்…
இதோ…
வானத்து நிலவில்
குளிர்காயும் மாடிவீடு
ஞாலத்து உழைப்பில்
கோடி ஈஸ்வரர்கள்…..
தமிழன்…..
உழைத்து உருக்குலைந்து
ஊருக்கு உயர்வை தந்தான்
பேருக்கு ஏழையானான்
யாரிடம் பெற்றான்
இச்சாகா வரத்தை….?
வாழ்வின் அகராதியில்
அத்தியாயம் நீளுகின்றன..
சத்தியங்கள் மாய்கின்றன..
புத்தியும் மங்கிவிடுகின்றன…..
தூவலின் எச்சிலில்
துயர்களைப் பாடிப்பாடி-என்னை
துக்கம்தான் அரவணைத்த்து
துவண்டு போன
குமுகாயச் செடி
செழிக்க கருத்துமாரியை
பொழிந்தேன்…
இன்றோ….
என் நாவிற்கு
பூட்டிட்டனர்…..
விடைபெறுகிறேன்..
திருந்த்தாத உள்ளங்களை
திருத்திட பாயும்
தூவலின் எச்சிலை
துடைத்து விடுகிறேன்….