மாறிய சிலரின் பெண்ணியம்

திக்கித் திணறி பெண்மை ததும்ப பேசினாள் அன்று !
வேற்று மொழியில் நர்த்தனம் ஆடி பேசுகிறாள் இன்று !
நாணம் கொண்டு மனம் பறித்தாள் அன்று !
நாடகம் ஆடி மயக்கப்பார்க்கிறாள் இன்று !
சேலையில் பூத்திருந்த சோலை அவள் அன்று !
நாகரீக சாயத்தில் வெளுத்து நின்றவள் இன்று !
அன்பெனும் வில்லெடுத்து அடக்கத்தால் நாண் பூட்டியவள் அன்று !
அலங்கார சொல்லெடுத்து ஆட்டிப்படைக்கின்றாள் இன்று!
பெண்ணே ,
உன் பெண்மை எங்கே ?
நாணம் விற்று சுதந்திரம் வாங்கினாயா ?
அடையாளம் இழந்து அங்கிகாரம் பெற்றாயா ?
உடை பாவனை மாற்றி உரிமை உணர்வை அடைந்தாயா ?
தன்னிலையை அடகு வைத்து தலை நிமிர்ந்தாயா ?
கற்பனையில் நான் வடித்த அற்புத பெண்களை காணவில்லை!
தெளிவான சிந்தனை கொண்ட அருவி அவள் !
தைரியமான வாக்கு உரைப்பதில் பாரதியின் சாயல் அவள் !
நாணம்கொண்ட வேளையில் செயற்கை இல்லா அந்தி வானம் அவள்!
நன்மையை மட்டும் தேடும் அன்னப்பட்சி அவள் !
ஆண்களின் முன்னிலையில் தலை கவிழ்ந்த தாமரை அவள்!
அநீதியை காணும்போது ஆதிசிவனின் பாதி அவள் !
செல்வத்திற்கு மயங்காத மாண்புமிகு உயிர் அவள்!
என்றெல்லாம் எண்ணியதில் தவறிழைத்து விட்டேனோ ?
வேண்டாம் பெண்ணே !
நம் இயல்பிற்கு திரும்பி வா ....
கிட்டாதாயின் வெட்டென மற!
கற்பனை உலகிற்கு கடிவாளம் இடு !
உண்மைக்கு உயிர் கொடு !
காசை மதியாதே !
மாயைக்கு கை கொடுக்காதே !
பெண்மையை மறவாதே !
சுதந்திரத்தின் முழு அர்த்தம் உணர்ந்து கொள் !
இயலாவிடில் இயங்காதே!!
உத்தரவின்றி உச்சி வானில் உண்மையில்லாமல் உயராதே !
எங்கெங்கே நீ சென்றாலும் உனக்குள் உறைந்துள்ள பெண்ணியத்தை மறவாதே ..!
சுதந்திரமும் சுயநலமும் என்றும் ஒன்றாகிடாது
"என் பாரதியின் போராட்டத்திற்கு இழுக்கு சேர்க்காதே
அவர் ஜீவன் வடிக்கும் கண்ணீர் உன்னை சோலை ஆக்காது பாலை ஆக்கிவிடும் ! " —