அம்மா மெஸ், ஐயப்பந்தாங்கல்

ஒன்றுக்கொன்று
கைகளைக் கோர்த்துக்கொண்டிருந்தது
பஞ்சுப்பொதியலென நான்கு இட்டிலிகள்
அந்தத் தட்டத்தில்.

நான்கையும் மூழ்கடிக்கும் முயற்சியில்
தோற்றுப் போய் பாதி உயரத்தில்
இருந்தது மல்லிகைப் பூவைப்போல
தேங்காய்ச் சட்டினி.

ஆங்காங்கே எண்ணைத் தீவில்
விலாசம் தேடி அலைந்து கொண்டிருந்தது
கூட்டம் கூட்டமாக பொரிந்த கடுகுக் கூட்டங்கள்.

மிதமாக வருபட்டு சுருண்ட
கருவேப்பிலைகள் சிறை பிடித்த எண்ணை
சட்டினியின் மேற்புரத்தில்
வெளிர் பச்சை நிறத்தில் படற
கடுகுகள் விலகி ஓடுகிறது
தலை தெறிக்கும் வேகத்துடன்.

ஆவி பறக்கும் சாம்பார் கிண்ணத்தில்
ஓடம் விட்டுக்கொண்டிருந்தது
ஒரிரண்டு பசுமையான பீன்ஸ் துண்டுகள்.

பரிமாறப்பட்ட இட்டிலிகளில்
என் அம்மா அன்புடன் பரிசோதித்த
ஆள்காட்டி விரல் குழித் தடயங்களும்
இருந்திருந்தால்
இன்னும் அதிகமாக ரசித்திருப்பேனோ என்னவோ.......

எழுதியவர் : பிரேமா பிரபா (12-Apr-13, 1:28 pm)
பார்வை : 125

மேலே