விழித்துக்கொண்டிரு

போட்டிகள் நிறைந்த உலகம் இதிலே,
ஓட்டபந்தயமே எதிலும் நடக்குது ,
ஓடிக்கொண்டிரு நீயும் தொடர்ந்து ,
உட்கார்ந்து விடாதே என்றும் அயர்ந்து !

உன்னை சுற்றும் சூழ்ச்சி மனிதர்கள்,
உண்மையை மறைத்து பொய்யும் சொல்வார்,
தன்னலம் தேடி உன்நலம் தடுத்து,
உன்னை வீழ்த்தியும் உயர்வை தேடுவார் !

பொய்யாய் புகழும் கூட்டமும் உண்டு,
மெய்யாய் இகழும் மனிதரும் உண்டு ,
ஏற்றம் கொடுக்கும் ஏணிகள் இல்லை ,
இழுத்து விட்டு சிரிக்கும் கூட்டமே உண்டு !

உள் ஒன்றும் வைத்து புறம் ஒன்று பேசும்,
பொய்யான உலகமே உந்தன் வசிப்பிடம் ,
பொய்யானவர்களை நீயும் தவிர்க்க பாரு,
மெய்யானவர்களை தேடி இணைப்பில் சேரு!

பொறாமை கொண்ட மனித மனங்களில்,
மெய்யான எண்ணங்கள் மறைந்து போக,
குறுக்கு வழியில் முயற்சியை தேடி ,
இயன்றவரையில் முயன்று பார்க்குது !

அக்கறை கொள்ளும் அன்பும் கொள்ளும் ,
உந்தன் கையில் இருக்கும் வரைக்கும் ,
இகழ்ச்சி கொள்ளும் ஏசி ஒதுக்கும்,
பணம் ஏதுமில்லாமல் ஏழ்மையில் இருந்தால் !

உன்னை நேசிக்க ஒருத்தரும் இல்லை,
வெறுப்பவர்கள் எண்ணிக்கை ஆயிரம் உண்டு ,
உந்தன் கையே உனக்கு துணை ,
நீயே என்றும் உனக்கு தோழன் !

சிந்தித்து பார்த்து செயல்படு எதிலும் ,
விழிப்புடன் செயல்பட்டு செழிப்பை தேடு ,
விரயம் இல்லாத உழைப்பை விதைத்து,
உறங்கும்போது போதும் விழித்துக்கொண்டிரு!

எழுதியவர் : வினாயகமுருகன் (12-Apr-13, 12:40 pm)
பார்வை : 113

மேலே