சாதிகள் உள்ளதடி பாப்பா,,,(ஹுஜ்ஜா)

பள்ளியின்
விண்ணப்ப படிவம்
பகிரங்கமாய்
பாடுகிறது
"சாதிகள் உள்ளதடி பாப்பா""
பால்வாடி
நுழைவுத்தேர்வு
பதிந்தது மனதில்
''படிக்காத பெற்றோர்கள்''
முதல் நாள் வகுப்பில்
முதல் பாடமாய்
உள்ளம் கற்றது
''தாய் மொழி தவிர்''
தாமதமாய் வருவதற்கு
தூக்கமே காரணமென்றதும்
கன்னத்தில் விழுந்தது அறை
உறைத்தது உள்ளத்தில்
''பொய்யே கேடயம்''
அரட்டி மிரட்டும்
ஆசிரியரை கண்டதும்,
'ஆசிரியரும் அம்மாதான்' என்ற
அம்மாவின் வார்த்தைகள்
அபத்தமாய் உணரப்பட்டது.
பார்த்து எழுதியவனின் பெயர்
மதிப்பெண் பட்டியலில் முன்னணி
இதயம் உள்வாங்கியது
''குறுக்குவழியே வெற்றிக்கு துரிதப்பாதை''
இப்படி
கற்றதெல்லாம்
உண்மையா?
இதை
கற்பிக்கும் இடம்தான்
பள்ளியா?