பாணன், விறலி

மென் பொருள் உலகின் வல்லுனன்
தன் பொருள் அறியான்.....
இரவுப் பணி, துரத்துகிறது
கட்டளைகளும், கோடிபிகேசன்களும்
முடித்தே ஆக வேண்டிய பணிகள்
காத்திருக்கிறான் அங்கிள் சாம் அங்கே

கண் அயருகிறது, தலை துவளுகிறது
விசை பலகை தலையணையாய்.

காட்சிகள் விரிகிறது.....
நான் பாணன், நீ அழகு விறலி
சீறி யாழும், சகோட யாழும்
நம் இருவர் விரல்களில்
கானம் பொழிகிறது.

என் இசைக்கு நீ ஆட உன் இசைக்கு
நான் ஆட, அங்கே காலமும்
மக்களும் கைகட்டி பார்க்கின்றனர்...
இரவும் நீளுகிறது நம் நடனம் களிக்க.....

ஐவகை நிலங்களும் நம் மேடை,
ஐவகை மன்னரும், மக்களும்
நம் ரசிகர்கள்..
சென்ற இடமெல்லாம் சிறப்பு

மருதத்தின் வரிகளை, முல்லைக்கும்,
முல்லையின் வரிகளை
நெய்தலுக்கும், நெய்தலின் வரிகளை, குறிஞ்சிக்கும்
எடுத்துச் சென்றோம்,
திரிந்த பாலையில் அத்தனை வாசமும்...

நீள் விழியின் நயனங்கள்
புஜத்தின் நரம்புகளை
யாழாய் மீட்டி இசைத்தது,
உள்ளிசை பொங்கி வழிகிறது
இருவர் இதயத்திலும்....

நீ எடுத்து சூடியாதாலே
அந் நிலத்தின் மலராகியது அவை....
நம் உணர்வே உரி பொருளாயின...

காதுகளில் விறலியின் குரல்
விராலி வோரா காலிங்....
விராலி வோரா காலிங்....
ஹை... SP.......ஆர் யு தேர் ?

எழுதியவர் : சுந்தர பாண்டியன் (22-Aug-13, 1:55 pm)
சேர்த்தது : சுந்தர பாண்டியன்
பார்வை : 83

மேலே