[499] கூட்டமும் மறையும்..கூறுகள் கலையும்!

விதியென் றென்னை
வீதியில் விட்டவன்
கதியினை எனது
கைகளில் எடுத்தேன்!

களிமண் பிசைந்தேன்;
கடவுளாய் மாற்றினேன்!
ஒளிர்வண்ணக் கலவையை
ஊற்றியே மினுக்கினேன்!

விழியெலாம் திறந்து
வியப்புடன் பார்த்தனர்!
வழியெலாம் வைத்து
வழிபா டெடுத்தனர்!

படைத்தவன் என்னைப்
பாடிட மறந்து
படைப்பினைப் போற்றிப்
பாடியே மகிழ்ந்தனர்!

அலைகடல் அடைந்தே
ஆட்டமும் நிற்கும்;
சிலைகளாய்க் கடவுளர்
சிறுத்துள் மறைவர்!

கூட்டமும் மறையும்;
கூறுகள் கலையும்!
பாட்டினை அலைகள்
பாடியே திரும்பும்!
==========

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (9-Sep-13, 3:52 pm)
பார்வை : 67

மேலே