மனைவி என்னும் சங்கீதம்

"மனைவி என்னும் சங்கீதம்"
உலகம் உள்ளங்கையில் அடங்கிவிட்டது என்று சொல்கிறார்களே,
நீ மட்டும் எப்படி என் தொடர்புக்கு அப்பால் இருக்கின்றாய் எந்நேரமும்....
எத்திக்கு நோக்கினும் என் விழிகளில் நிழலாடுகின்றது உன் உருவம்...
வத்திக்குச்சி போல் சரசமாடி என்னை வெப்பக்குழியில் தள்ளியவளே...
குத்திக் கிழிக்கின்றது நெஞ்சில் நீயில்லாத தனிமையின் கொடுமை....
வாக்கப்பட்டு வந்த நாள் முதல், வாரி வழங்கிய உன் அன்பினால்,
சக்கப்போடு போட்டு சதிராடிய என் வாலிப உள்ளம் இன்று,
ஏக்கத்தில் திசை மாறிய படகு போல் தத்தளிக்கின்றது....
என்னுள் நீ...உன்னுள் நான் என்று ஏகாந்தமாய் இல்லற வாழ்வை,
கண்ணுள் பதித்த காவியமாய் காதலோடு பகிர்ந்திட்டதால்,
உன்னுள் இப்போது உலவும் உயிர் நீயா இல்லை நானா....?
காதலியாக காதலையும் களிப்பையும் ஒரு சேர தந்தவள் நீ,
மனைவியாகி மகிழ்வையும் மகரந்தத்தையும் தந்தவள் நீ,
தந்தையெனும் பெரும் பாக்கியத்தை நான் அடைந்திட நீ
தாயாகி என் பிறப்பின் உன்னதத்தை உச்சிக்கு ஏற்றியவள் நீ...
பத்து திங்கள் உன் தாய்மைக் கோல அழகினில் நான்
சத்தியமாய் அனுபவித்தேன் புளகாங்கிதம் பலகோடி...
மொத்தமாய் எனை ஆட்கொண்டு முழுநிலவாய் பிரகாசித்து
சித்தத்தை சிதறடித்த என் பத்தரை மாற்று தங்கமே....
தலைப்பிரசவத்திற்கு தாய்வீடு தான் போகனும் என்ற நிர்ப்பந்தத்தில்,
விலைமதிக்க முடியாத உன்னை என்னை விட்டு பிரித்து சென்றதில்,
இலையளவு கூட நிம்மதியும் சந்தோஷமும் இல்லாமல்
மலையளவு வேதனை மனதினை கொல்லுகிறதடி....
என் கண்ணான கண்மணியே, நம் கண்ணின் மணியை,
கனகச்சிதமாய் என்னிடம் கொண்டு வரும்வரை,,
காத்திருப்பேன் தணியாத தாபத்துடனும்,
வற்றாத காதலுடனும் உன் ஊடலில் கூடிய கணவன்....!
...............*************...................*************...........