கைக் காட்டியவள்! (மெய்யன் நடராஜ்)
தாமதமாய் சென்றுவிட்ட
ஒரு மரண வீட்டு வாசலில்
நின்றிருந்த அவளிடம்
ஊரின் மயானத்திர்கான
வழியைக் கேட்டேன்
கை காட்டினாள்..
.
பின்பொருநாள்
காதலுக்கான
பற்றுச் சீட்டை
கண்களால்
எழுதிக் கொடுத்தவள்
வாழ்க்கையின் ஊருக்கு
போக இருந்த என்
பயணத்துக்கான
இரயிலை திசைமாற்றிவிட்டு
கனவுகளின் பொதியோடு
காத்திருந்த எனக்கு
கல்லறைக்கான ரயிலை
நிறுத்த விழுந்த
கை காட்டியாகிப் போனாள்
அப்போதுதான் புரிந்தது
அன்று
மயானத்திற்காக
கைக் காட்டியவள்
அதை என்
மனசுக்கும்
காட்டியிருந்தாள் என்று.