கை சேரா காதல் கடிதம்...!!

விரட்டி அடித்த என் வார்த்தைகள் முன்
வளைந்து கொடுத்த உன் ஆண்மையின்
வன்மையான கர்வத்தில் கரைந்து போனவள்
எழுதுகிறேன்...

உன் கண்கள் மட்டும் உணர்ந்து கொள்ளும்
என் கண்ணீர்த்துளிகள் காய்ந்திருக்கும்
என்ற நம்பிக்கையில் தான்
கேட்கிறேன்...

தொலைதூரம் சென்ற பின் திரும்பி பார்த்து
தொல்லை தந்த பார்வைவைகளின் சேகரிப்பில்
தொலைந்து போன என் இமைகள்
நலமா...?

நீ கடைசியாய் கொடுத்துவிட்டு சென்ற
முத்தத்தின் ஆழத்தில் ஆரவாரமாய்
மூழ்கிப்போன வார்த்தைகள்
நலமே..

சகியாய் உனக்காக நான் ஏற்ற
சகிக்க முடியா வார்த்தைகளின்
எண்ணிக்கை குறைவாகத்தான் போனது
உன் முகமறியா மனைவியின்
அறிமுகத்தின்போது...

இதயத்தின் கடைசி எலும்பையும் நொறுக்கிவிடும்
இதயமில்ல மின் பார்வையை உணர்ந்தேன்
கையில் கீறிக்கொண்ட கண்ணாடி துண்டின்
முனையில்..


மீளமுடியாமல் மிரட்டி கண்சிமிட்டும் சிரிப்பில்
சிக்கிக்கொண்டு செயலிழந்த எண்ணங்களை
மீட்டெடுக்க மருந்தொன்றும் கிடைக்கவில்லை
இதுவரை...

தெளிவில்லா உன் கையொப்பம் சுமந்த
கணம் தாங்காமல் தவறிவிட்ட பொறியியல் புத்தகங்கள்
திமிரோடு என் கரங்களில் திணிக்க பட்டதை
நீ அறிவாய்...

கரையில்லா கண்ணீரோடு...
முழுதாய் தொலைத்த முகவரிக்கு
எழுதும் கடிதம்....
என் கவிதை புத்தகத்தின்
வெள்ளை பக்கங்களாக...!!

எழுதியவர் : கல்பனா ரவீந்திரக்குமார் (22-Sep-13, 6:48 pm)
பார்வை : 233

மேலே