தமிழின் தோழனா நீ

தென்பொதிகை சங்கத்தமிழா நீ?
செம்மாந்த மொழிக்குழுமமா நீ?
பண்ணாற்றும் பார்கவியா நீ...?

சங்கம் எதிலேனும்
அங்கம் வகித்தாயா நீ...?
அரங்கம் எதிலேனும்
கவிப் படித்தாயா நீ...?

எத்தனை நூற்களை
தமிழுக்குப் படைத்தாய் நீ...?
எத்தனை கவியரங்கத்தில்
தமிழ்ப்புகழ் பாடினாய் நீ..?

ஒன்றைச் சொல்ல முடியுமா உன்னால்...?
முடியாது என்பதே
இங்கு அனைவரும்
அறிந்தப் பதிலே...

விரல் விட்டு
எண்ணுமளவிற்குகூட
உன்னால் சொல்ல முடியாது...

அப்படியிருக்க
நீயே உனக்கு
தமிழின் தோழனென்று
பட்டம் கொடுத்து
தம்பட்டம் அடித்துக்கொள்கிறாய்...

என்ன செய்தாய் நீ...?
உனக்கு ஏன் இப்பட்டம்...?
தேவையில்லாத ஆர்ப்பாட்டம்...?

உன்னை
தமிழின் தோழனென்று
சொன்னால் நல்ல
தமிழ் அறிஞர்களை
தமிழ் புலவர்களை
தமிழ் கவிஞர்களை
தமிழ் நேசர்களை
என்னவென்று சொல்லி இனி
நாங்கள் அழைப்பது...?

தகுதியுடையோர் பெற்றுச்செல்லும்
தரமான பட்டமது...
தகுதியற்ற நீ
சூட்டிக்கொள்ளலாமா...?

இதுதான் தமிழுக்கு
நீ செய்யும் தொண்டா...?
இல்லை
தமிழ்பேரைச் சொல்லி
வாழ நீ
கண்டுப்பிடித்த புது ட்ரெண்டா...?

எழுதியவர் : sivaranjani (14-Nov-13, 5:01 pm)
சேர்த்தது : சிவரஞ்சனி
பார்வை : 104

மேலே