நான் சச்சின் டெண்டுல்கர்

பூக்கள் பூத்து குலுங்கும் போது ரசிக்கும் நம் கண்கள், அது வாடி சருகாய் வீழம்போது கண்கள் அதன்மீது விமர்சனம் அல்லது ஏளன விஷப்பார்வையை வீசும் . சிலரின் கண்கள் மட்டும் வீழ்ந்து காற்றில் பறக்க துடிக்கும் சருகின் அழகை ரசிக்கும். அந்த சருகு பூ மண்ணில் கலந்து உரமாகி மீண்டும் ஒர் புது பூவாக மலரும் என்பது சுழற்சி முறையை அறிந்தவர்களுக்கு தெரியும்.
மைதானத்தில் களமிறங்கி, தன் மட்டையால் மாய வித்தைகளை காட்டி, எட்டு திசைகளுக்கும் பந்தை பறவையாக்கி அனுப்பும்போது நமது கண்கள் அந்த பறவையின் பறக்கும் அழகை ரசிக்கும். சிலரின் கண்கள் மட்டும், பறவையை கவனிக்க மறந்து மட்டையை சுழற்றியவனின் நடவடிக்கைகளை, அவனின் திறமையை ஆராய்ந்து ரசிக்கும்.
அந்த ஒர் சிலர் கண்களை போல, என் கண்களும் , மனமும் “ சச்சின் டெண்டுல்கர் “ என்ற மாபெரும் மனிதனை ரசித்தது.
சச்சின்.. சச்சின்.. சச்சின்.. என்றே பள்ளி பயின்ற காலத்தில் சச்சின் பித்தனாக அலைந்த அந்த தருணங்கள். சுவிங்கத்தை வீசிவிட்டு அதனை சுற்றியுள்ள ”சச்சின்” உருவம்பொதிந்த தாள்களை மட்டும் சேகரித்த அந்த மனநிறைவுகள். சச்சின் ஆட்டமிழந்த விசனத்தால் மன அமைதி பாதிக்கப்பட்டு +2 பொது தேர்வினை பிழையாக எழுதி ஒர் வருடத்தை தவறவிட்ட அந்த தியாகங்கள் என்று என்னை சச்சினின் அதி தீவிர ரசிகனாக எனக்குள் மட்டும் காட்டிக்கொண்டேன்.
சச்சின் அளிக்கும் பேட்டியை புரிந்துக்கொள்ள ஆங்கில அகராதியில் சச்சனின் ஆட்டத்தை போலவே அதிரடியாக அர்த்தத்தை தேடிய அந்த அனுபவங்கள்தான் , பின்னாளில் என் ஆங்கில அறிவுக்கும் , ஆங்கில மொழியில் கல்லூரி படிப்பை தொடரவும் உதவியது.
இக்கட்டான கால கட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு வெற்றியை தேடி தந்த இந்த மாபெரும் வீரனை, தவறான கணிப்பினால் ஆட்டிமிழக்கும் போது வசை பாடும் ரசிகர் கூட்டத்தில் நான் இருந்தில்லை. அடுத்த ஆட்டத்தில் அவரின் மட்டை எப்படியும் பதிலடி தரும் என்ற ஆதீத நம்பிக்கையோடு காத்திருப்பேன். எப்படி வந்தது எனக்கு இந்த பக்குவம்....? சச்சினின் குணதாசியத்தையும் ரசித்து பின்பற்றியதால்..
சச்சின் எனக்கு குரு அல்ல, காரணம் நான் விளையாட்டு வீரன் அல்ல. ஆனாலும் சச்சின் கற்றுக்கொடுத்த பாடங்கள் பல.
சச்சினை மைதானத்திற்கு வெளியேவும் அவரின் நடவடிக்கைகளையும் ரசித்தது என் மனது. வெறும் புள்ளி விவர பட்டியல்களின் அடிப்படையில் சாதித்து பெரும்புள்ளியாகி விட்ட சச்சினை மட்டும் நான் ரசிக்கவில்லை. மாறாக எந்த நேரமும் , எந்த சாதனை நிகழ்வுகளிலும், எந்த பாராட்டு, புகழ்ச்சி போதையிலும் அவரின் இயல்பான குணங்கள் மாறியதில்லை. இப்படிப்பட்ட சிறந்த மனிதனையும் ரசித்தது என் மனது.
இருபத்தி நான்கு வருட சாதனை பயணத்தில் இறுதி வரை எந்த தவறான குற்றச்சாட்டுக்கும் ஆளாகமல் தன்னை ஒழக்கசீலனாக நீருபித்து விட்டார் சச்சின்.
பல கோடி சச்சின் டெண்டுல்கர் பக்தர்களில் ஒர் பக்தனான என் வாழ்வில் சச்சின் என்ற மந்திரசொல் என்னை பக்குவப்பட்ட சாதனை மனிதனாக மாற்ற துடித்து கொண்டிருக்கிறது.
என்னைப்போல கோடானகோடி சச்சின் பக்தர்களின் வாழ்விலும் சச்சின் டெண்டுல்கர் மாற்றத்தை நிகழ்த்தி இருப்பார், நிகழ்த்துவார்
சச்சின் என்ற கிரிக்கெட் வீரர் ஒய்வு பெற்றுவிட்டார். ஆனால்,
சச்சின் என்ற சகாப்தம் ஒய்வு பெறவில்லை.
இதோ ! சச்சினின் சாதனை சப்தம் என்னையும் சாதிக்க சொல்லி உற்சாகப்படுத்துகிறது.