இசைக்க மறந்த வீணை
சன்னலோரத்து ரோஜா தலையை ஆட்டியபடி, கண்ணாடிக் கதவைத் தன் இதழ்வாயால் முத்தமிட்டுத் திறக்க முயற்சித்தபடி இருந்ததைக்கண்ட சிவா, “அப்பா! சூரியவெளிச்சம் செடிக்குத் தேவை தானே! ஏன் கதவைச் சாத்தியிருக்கு?“ எனக் கேட்க,
“ஓவரா வெயில்பட்டா செடி வாடிப் போயிடும்பா! அந்த வெள்ளை ரோஜாவைப் பாத்தியா? ஓரத்தில பிங்க் நிறம் வச்சமாதிரி அதுக்கு பார்டர் வேற!... ஏம்பா நீதான் கதை எழுதறேன்னு உக்காண்டுருக்கியே! எழுந்து தண்ணீ ஊத்தறது! கதவைத் திறந்து வைக்கறது! ஏதோ சாஃப்ட்வேர் கம்பெனில வேலைல இருக்கோம்னு பொழுதன்னிக்கும் சிஸ்டத்தோட மல்லடிச்சிண்டு இருக்க! நீ காதுல பாட்டுக் கேட்க வயர் வயரா போட்டுக்கற! ஆனா வாட்ச் கூட கட்டறதுல்ல. கேட்டா டிஸ்டர்ப்புங்கற“ ஏதோ இப்பதான் கொஞ்சம் நான் சொல்றேன்னு உனக்குப் பிடிச்ச லைனுக்கு வந்துண்டிருக்க....
“அப்பா! இந்தக்காலத்து இளைஞர்களைப் பத்தி நீங்க இன்னும் புரிஞ்சுக்கலப்பா!“
“என்ன புரிஞ்சுக்கல?“
“அதோ பாருங்க பஸ் போயிண்டிருக்கு! ரோடு ஃபுல்லா தூசி பறக்குது! ரோடு போடறதா சொல்லி நாலு மாசம் ஆகுது... அங்கங்க பள்ளம்! இன்னமும் யாரும் அதைச் சரி செஞ்சமாதிரி தெரியல“.
பக்கத்துல டாஸ்மாக்!......... விழுந்தான்னா அவன் வீட்டு கதி!? மழைக்காலமும் நெருங்கிடுச்சு...
பக்கத்தாத்து சமையல்வேலை செய்யற மாமி பையன் இப்பத்தாம்பா வந்துசொல்லிட்டுப்போனான் அவன் இன்னும் ஸ்கூல் ஃபீஸ் கட்டலையாம்....
உனக்கென்ன அதைப்பத்தி!... நீ தான் ஃபாரின் போய் கை நிறைய சம்பாதிக்கப் போற...
அப்புறம் என்ன? உனக்கு அதைப்பத்தியெல்லாம் என்ன கவலை?
”படிச்ச... படிச்சதுக்குத் தகுந்த வேலை கிடைச்சுது...ஃபார்ன் சான்ஸ் வந்தா கிளம்பு!... அதானே இந்தக் காலத்துப் பசங்களுக்கு... கார்ல போகணும்... வேணுங்கறத வாங்கணும்... நிக்க ஒரு இடம்... படுக்க ஒரு இடம்... உட்கார ஒரு இடம்... உலகம் ஃபுல்லா சுத்தி வரணும்! சனி, ஞாயிறுன்னா ஃப்ரெண்ட்ஸ் இதானே! உங்க எய்ம்?”
நிறையபேர் அப்படித்தாம்பா நினைச்சுண்டிருக்கா...
நான் என்ன சொல்ல வர்றேன்னா...!
நம்ம அப்புறமா பேசலாம்... ”வா! கோயிலுக்குப் போகலாம்...!”
”சரி! அப்படியே அம்மா படத்துக்கு அந்த ரோஜாவைப் பறிச்சு வச்சுட்டு வாப்பா!...”
அப்பா! உங்களை நான் ஒரு கேள்வி கேக்கட்டுமா!
”ஏம்பா! நீங்க அம்மா இறந்ததுக்கப்புறம் இரண்டாம் கல்யாணம் செஞ்சுக்கலை...”
மௌனமாக சுவரில் தொங்கியிருந்த தன் மனைவியின் படத்திலிருந்த கண்களை உற்றுநோக்கினார் அரவிந்த்.
பூமியில பிறந்த மனிதர்கள் எல்லாம் அவங்க குழந்தைகள்னு நினைச்சுத்தாம்பா கடவுள் படைச்சாரு... நாம, நம்ம கல்வி கத்துக்கறது, நம்ம பேரண்ட்ஸ், நமக்கு வழி காட்டின பெரியவங்க இவங்கள முன்னுதாரணமா வச்சுத்தாம்பா வாழறோம்! என்னைப் பொறுத்தவரைக்கும் அப்பா, அம்மா, நமக்குக் கிடைத்த லைஃப் பார்ட்னர் எல்லாமே ஒரே ஒருத்தர் தாம்பா! பிடிச்சா வேற சட்டைய மாத்தியோ, வெரைட்டி ஃபுட் சாப்புடற மாதிரியோ இஷ்டத்துக்கும் இந்த உறவு முறையை மாத்திக்க முடியாதுப்பா!...
வாழ்க்கைன்னா நெளிவு சுளிவுன்னு இருக்கத்தான் செய்யும்! அதுக்காக இஷ்டத்துக்கு வாழறது இல்லை வாழ்க்கை. இதாம்பா நா உங்கம்மாவோட வாழ்ந்த வாழ்க்கையில அனுபவிச்சு தெரிஞசுக்கிட்டது.
அதுக்காக நம்ம வசதியான லைஃபை நாம தொலைக்கணுமா?...
பழகிய குரல் கேட்டு நிமிர்ந்தார் அரவிந்த்.
அப்துல்லா!... வாடா எப்ப வந்தே?... ஆச்சு! சன்னலோரத்து ரோஜாவுல ஆரம்பிச்சப்பவே வந்துட்டேன்.
”ஏண்டா! வந்தவுடனே உள்ள வர்றதுக்கு என்னடா? வாசப்படியிலேயே நின்னுண்ட...!”
அப்பாவுக்கும் பையனுக்கும் நடுவுல நான் யார்?...
நான் கேக்க நினைச்சு மௌனமாகிப் போனதை உம் பையன் கேக்கறானே? நீ என்ன சொல்றன்னு பார்ப்போம்னு தான் வெயிட் பண்ணினேன்.!என்றார் அப்துல்லா..
ஆமா ....என்ன கேட்ட?.....மனைவி இல்லாம இருக்கறத சொல்றியா?....இதோ...இந்த படம் வெறும் உயிரற்ற ஜடமா வேணும்னா பாக்கறவங்க கண்ணுக்குத் தெரியலாம்...ஆனா...... சில உறவுகளைப் பற்றி வெளியே பேசலாம்.ஆனா தாம்பத்ய துணை அப்படியில்லைன்னு நினைக்கிறேன்.......மௌனமானார் அரவிந்த்.
பதில ரொம்ப கரெக்டா சொல்லிட்ட...என்றார் மேரி கொண்டுவந்த காப்பியை உறிஞ்சியபடி.
அவிக எப்பயுமே இப்பிடித்தான்! நானும் இந்தப் பையன் மூணு வயசு இருக்கறப்பதான் இங்கு தோட்ட வேலைக்கு வந்தேன். உங்கப்பா தான் வீட்டு வேலை அத்தனையும்! இதோ! தம்பிக்கும் கல்யாண வயசு வந்தாச்சு!
மேரி பாட்டி! சும்மா கல்யாணம்னு இப்பவே பேசாதீங்கோ! எனக்குன்னு இன்னமும் சில கடமைகள் இருக்கு...
என்ன செய்யப் போற?...
“நான் இங்க வந்ததே அதுக்குத்தான்! நல்ல அலயன்ஸ் ஒண்ணு வந்துருக்கு... உனக்கேத்த நல்ல குணம். உன் படிப்பு, அழகு, உன் கொள்கை எல்லாத்துக்கும் பொருத்தமா இருக்கும்னு எடுத்துட்டு வந்துருக்கேன் சாதகத்தோட... முடிச்சிட்டு ஸ்டேட்ஸ்க்குப் போயிடு“ என்றார் அப்துல்லா.
அங்கிள்...... ” நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க?....” சாதகம் ...அது இதுன்னு......
செல்ஃபோனில் ஒலித்த குறையொன்றுமில்லை! பாடலை நிதானமாக இரசித்த சிவா, “ஹலோ!“ என்றான்.
கிடைச்சா வாங்கிடு...!உன் ஹஸ்பெண்ட் என்ன சொல்றார்?
”...................................................................”
நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா? என் கொள்கையும், உன் கொள்கையுமே என்னைக்குமே ஒண்ணு தான் நிவி... இசைக்க மறந்த வீணையாய் பெட்டிக்குள்ள இருக்கறத நான் விரும்பல நிவி...
சரி! ”அப்புறம் பேசறேன்... அங்கிள் வந்திருக்கார் பேசுறியா...? சரி வைக்கிறேன்.”
என் ஃப்ரெண்டுப்பா!...... உங்களுக்கும் தெரியும்...... நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருந்தாளே நிவின்னு..... அவதான் பண்ணா. அப்பறமா சொல்றன்பா அதப்பத்தி.........!
அவளா! சரிப்பா... சரி எங்க விட்டோம்?........முடிவா என்ன சொல்ற........
அப்பா.......”5ரூபாய்க்கு ஷேர் ஆட்டோவுல டிராவல் பண்ணா தஞ்சாவூர்ல டிக்கட் தர்றவனுக்கும், சென்னைல கடைல குடை வாங்கினாகூட பில் தராம இருக்கறவன் மனசும் வேறயா இருக்கறதுப்பா....... இடமும் வேறயா இருக்கறதுப்பா... மனசு அது போலத்தாம்பா சில நேரங்கள்ல ரொம்ப கனமாயிடுதுப்பா...”
பச்சை சாயத்துல தோச்செடுத்த வெள்ளை ரோஜா மாதிரி.......... இன்னைக்கு நாங்களும்...தப்பா உங்க பார்வைல நிக்கறோம்!
நீங்க பணத்தை பிள்ளைங்க கிட்ட எதிர்பார்க்கறதில்ல! உங்க சொந்தம், உங்க ஊர்,பெருமையா பிள்ளை ஸ்டேட்ஸ்ல இருக்கான் அப்படின்னு சொல்லிக்கமட்டும்தான் நினைக்கிறீங்க? சோஷியல் சர்வீசும் செய்யறீங்க!
சில பேர் இருக்காங்கப்பா! கஷ்டப்பட்டுட்டேதாம்பா இருப்பாங்க! கடைசிவரை பிள்ளைங்க பணத்தை எடுக்கக்கூடாதுன்னு.....!அவங்க ஐடியா என்னன்னே தெரியலப்பா! வெளிநாட்டுக்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கறதுன்னு போறோம். விவேகானந்தரையும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்!‘ புறநானூறையும் நினைச்சுத்தாம்பா வாழணும்னு நினைக்கிறோம்! அதுக்காக குடும்ப ஸ்டைல மாத்திக்க மாட்டோம்!
இப்படித்தான் சொல்லுவீங்க...அப்பறம் உலக அழகி மாதிரி வேணும்பீங்க........சிரித்தார் அப்துல்லா.
நோ நோ....இட்ஸ் இம்பாஸிபிள்....உங்க லைஃப் ஸ்டைல்தாம்பா கரெக்ட். உலகெங்கும் இந்த லைஃப் ஸ்டைல் வரக்கூடாதா? அப்படின்னு நாங்க நினைக்காத நாளில்லை........
“இதெல்லாம் இந்தக்காலத்துக்கு சரிப்படுமா? தம்பி ” என்றாள் மேரி. ஏன் சரிப்படாது பாட்டி? எங்களால் முடிஞ்சவரைக்கும் செய்யறோம். அங்கங்க சாஃப்ட்வேர் இன்ஜினியர்ஸ் நாங்கள்லாம் இடம் வாங்கறோம்னு சொல்றீங்கள்ல. நீங்க உங்க அளவுல சோஷியல் சர்வீஸ் செய்யறத நாங்க உலகளவுல செய்யத்தான் பாடுபடறோம். இவ்வளவு செஞ்சும் அங்க பாருங்க! நாய்க்குப் பிஸ்கட் வாங்கிப் போடும் அந்தப் பிச்சைக்காரப்பாட்டியை!
மாமரத்தில் ஒற்றைக்குயிலொன்று சடசடவென்று கூட்டமாகப் பறக்கும் வெள்ளைப்புறாக்களைத் துரத்தியதைக் கண்கொட்டாமல் பார்த்தபடி, ஓரமாக இருந்த ஊன்றுகோலைத் தன் தோளுக்கு இடையில் கொடுத்தபடி ரோஜாவைப் பறிக்க கட்டைக்கால்கள் சப்திக்க வேகமாக நடந்தான் சிவா.
நடந்து கொண்டே ”கொஞ்ச நாளைக்கு முன்னாடி படிச்சேம்பா... கட்டு கட்டா பண மூட்டையை டாய்லெட்ல யாரோ வச்சுட்டு போய்ட்டாங்களாம். கண்டுபிடிச்சாங்களான்னு தெரியல..என .ஃபோட்டோவில் தெரசா சிரித்தபடி இருந்ததைப் பார்த்தபடி பேசினான்.
“மனுஷனுக்கு மனுஷன் அன்பு செலுத்த ஆளில்லைங்கறபோது அந்தப் பணத்தை வைக்கிற இடம் எதுன்னு பாத்தீங்களாப்பா?..........!” என்றான் சிவா.
பறித்த ரோஜாவை உள்ளங்கையில் வைத்து அதன் வெள்ளை வண்ணத்தைப் பார்த்தபடி மௌனமானான்.
எங்கோ துல்லியமான வீணையின் ஒலி கேட்க, அப்துல்லா வா! பக்கத்துல கௌரி ஆசிரமத்துல சில்ட்ரன்ஸ்டே செலிப்ரேஷன் இருக்கு... அதுக்கு ஏதோ ப்ரோக்ராம் அரேஞ்ச் பண்றான்னு நினைக்கிறேன்... ஆறு நாள்ல தீபாவளி வேற... அதுக்கு வேற நிறைய வேலை கிடக்கு... மகனே... ”வா! கோயிலுக்குப் போய்ட்டு அவரவர் வேலையைப் பார்க்கலாம்” என்றார் அரவிந்த்.
வீணை இசை நல்லாயிருக்குப்பா... பெட்டிக்குள்ளே இருந்திருந்தா இதெல்லாம் கேட்க முடியுமா? என்றார் அப்துல்லா.
அதை அங்கீகரிப்பதுபோல் மௌனமாக சிவாவின் தோளைத் தட்டினார் அரவிந்த்.
டீபாயின் மேலிருந்த புத்தருடைய சிலையில் வைத்திருந்த பூ காற்றில் ஆடியபடி மௌனமாகச் சிரித்தது.