வரதட்சணை
வரதட்சணை
வரம் வேண்டி தட்சணையா
இல்லை திருமணத்தில்
வரவேண்டிய தட்சணையா?
தட்சணை உனக்கெதற்கு-உயர்
பொன்னையே கொடுக்கையில
வரதட்சணை உனக்கெதற்கு
அக்கா, தங்கை உனக்கில்லையா?
எதுவானபோதும்
சிதைமூட்டாமல் சீதை ஒருத்தி
சிதைக்கப்படுகிறாள் உயிரோடு
என்பதுதான் நிதர்சனம்
இறைவனுக்கும் மனிதனுக்கும்
இடையிலிருக்கும் குருக்களுக்குக்
கேட்காமல் கொடுக்கும்-சிறு
காணிக்கை தான் தட்சணை
இறந்தவனின் இறுதி பயணத்தில்
திலகமென வீற்றிருக்கும் காசும் கூட
இடுகாட்டு ஊழியருக்கு-கேட்காமல்
கொடுக்கும் தட்சணை தான்.
கேட்டு பெறுவதும்-அளவுக்கு
மீறி கொடுக்க வைப்பதும்
தட்சணையல்ல
இல்லாதவன் கையேந்தும் பிச்சை
கேட்டு பெறாமல்
மனமகிழ்ந்து கொடுக்கும் தட்சணை
வரதட்சணையென கூறினாலும்
அதுதான் என்றும் மரியாதை பெறும்.