என்ன பிழை செய்தேன்

கண்ணிரண்டும் காண்பதென்ன காட்சிகள்தானோ
காட்சியென்றால் கற்பனையின் தோற்றங்களாமோ
வெண்பனியும் செங்கனலும் விளைத்தவர் யாரோ
வீசுமெழிற் காற்றெழுந்த விண் பெரிதாமோ
அண்டமெனும் செந்தணல்கொள் அற்புதமேடை
அதிலுருளுங் கோளங்களில் அதிசய ஓட்டம்
பிண்டமெனும் தோற்றங்களின் பிறப்பென்னும் பூமி
பிணியுழன்று தானழியும் பிணங்களின் வாழ்வு

தெண்ணிலவைத் தேடிவரும் மேகங்கள் கூட்டம்
திசையறியா இளம்பறவை தேடிடும் வானம்
மண் வளரும் சிறுமரமும் மாநதி யோட்டம்
மனதிலெழும் மகிழ்வுதரும் மாயையின் தோற்றம்
பெண்ணுடலும் பிணைவதிலும் பேரின்ப நாட்டம்
பிறந்தவரில் பாசமெழும் பிஞ்செனும் உள்ளம்
எண்ணமெனும் உள்ளெரியும் இச்சைகள் யாகம்
இறப்பினிலே சூனியத்தின் எழுச்சியில் மாழும்

கண்படவும் காதலெனும் கனிமலர்தோட்டம்
கைதொடவும் மெய்சிலிர்க்கும் கற்பனை நாட்டம்
பண்ணிசையும் பெண்நடமும் பருவத்தின் ஆடல்
பாவைகுரல் பேச்சினிலே பணிந்திடும் ஆவல்
கண்ணிமைக்க காதல்எழும் காமனின் போரும்
கடைவழிநீர் தேனமுதம் கற்பனை மோகம்
வெண்நரையும் பொன்திரையும் விளைத்திடும்போது
வேடமிழந் துண்மைவரும் விடியலின் காலம்

விண்பெருகி வீசுமனல் விளைத்தவர் கூடல்
வெள்ளையொளி வெய்யவனின் வீறெழும்சூடு
மண்ணுலகின் காந்தமெனும் மாபெரும் ஈர்ப்பு
மரணமெனும் யாக்கை கொளும் மண்ணுடன் தீய்ந்தே
கண்ணெதிரில் காற்றில்புகை கரைந்திடச் சாம்பல்
காணும்பல சாத்திரங்கள் கண்டிடும் ஞானம்
உண்மையில்லை பூமியெனும் உணர்வெழும்காலம்
ஓங்கியெழும் கேள்விகளின் உன்னத தேடல்

தண்மையுடல் அனலெரியும் தோல்வியில் வாழ்வு
தாங்குமுடல் பிணியுழன்று தவிப்புடன் கூடும்
உண்டழியும் தேகவளம் உள் பசிதாகம்
உணர்வுகளின் மாயவலம் உள்மன வேகம்
எண்ணமெலாம் இல்பொருளில் ஏற்படும்இச்சை
இழிவுதரும் ஏக்கமடை எழும் பெரும்தாழ்வு
பெண்ணவளே விண்ணிலுறை சக்தியென் தாயே
பிறந்ததுமேன் பொய்மையிதில் பிழை செய்தனாமோ

எழுதியவர் : கிரிகாசன் (7-Dec-13, 12:08 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 77

மேலே