அன்பு

அன்பொன்றே நிலைக்கணும்
அவனியிலே சிறக்கணும் !
அன்பாயுதம் இதயமேந்த
அனைத்தும் சுமுகமாகிடும்...!!

பகைமைதனை விரட்டிடும்
பழியுணர்வைப் போக்கிடும்
பரிவுகாட்டி அணைத்திடும்
பண்படுத்தி வழிகாட்டிடும் ....!!

காலப்போக்கில் தீக்குணமும்
காலாவதி ஆகணும்
காழ்ப்புணர்ச்சி கழிந்திட்டால்
கருணையுள்ளம் கடவுளாம் ...!!

நஞ்சைமட்டும் சேமித்தால்
நெஞ்சிலமைதி விலகிடும்
நித்திரையும் தொலைந்திடும்
நிம்மதியும் பறந்தோடிடும் ...!!

மன்னிப்பெனும் மாமருந்து
மறக்கச்செய்யும் தவறினை
மன்னித்தால் மனந்திறந்து
மனிதம் புனிதமாகுமே ....!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Dec-13, 1:02 pm)
பார்வை : 1252

மேலே