ஓடிபோய் கல்யாணம் கட்டிகிட்டோம்
குறுக்கே போனது பூனை
வலமிருந்தா? இடமிருந்தா?
கண்டுகொள்ளவில்லை!
அலறியது
ஆந்தையா? கூகையா?
புரிந்துகொள்ள நேரமில்லை!
வழியில் பார்த்தது
நிறைகுடமா? குறைகுடமா?
கவலையில்லை!
பெண்ணழைக்க போவது
ஒற்றைப்படையிலா?
இரட்டைப்படையிலா ?
தனியாக வந்தாள்!
காதலித்தோம்!
சேர்த்து வைக்க முறையிட்டோம்!
தள்ளுவண்டியில்
காலம் தள்ளுபவன் என்றே
தடை விதித்தார்கள்!
தள்ளுவண்டிகாரனே தஞ்சம் என்றாள்!
கொஞ்சம் துணிவோம் என்றேன் !
சீர்வரிசையா? செய்முறையா?
தேவையில்லை!
கோவிலா? மண்டபமா?
பாதுகாப்பில்லை!
ராகு காலமா? எமகண்டமா?
தெரியவில்லை!
பதிவு அதிகாரியே
ஆசி வழங்கினார்!
இருமணமும் ஒருமணமாயிற்று
இதற்கு பெயர் திருமணம் ஆயிற்று !
கைவண்டியில் காய்கறி விற்று
கால்வயிறு கஞ்சியும்
கான்வென்டில் குழந்தையும்
நெஞ்சில் நிம்மதியுமாய்!
காதல் இல்லாமல்
ஓடிப்போனவர்கள்
காவல் நிலையத்திலும் !
காசு பார்த்து!
காலம் பார்த்து!
அருந்ததி பார்த்து!
அட்சதை தூவி !
முடித்த திருமணங்கள்
மனது மாற்றிக்கொள்ளாததனால்
நீதிமன்றங்களிலும்!
* * *
கோடீஸ்வரன்