இலக்கில்லா குறிக்கோள்கள்

வீணையைத் தொலைத்த
சரஸ்வதிதேவி வீதியில்
அலைகிறாள் !
கல்வி வீணை கயவரிடத்தில்
கட்டுண்டதைக் காண சகிக்காமல்
வெகுண்டெழுந்தாள்,வேகமாய் !
வானளாவியக் கட்டிடங்கள்
நிறைந்த கல்வி வியாபாரநிலையங்கள்
காவல் வேலி போட்டன ,
தங்கள் பணபலத்தால்
கல்வியை முன்னிட்ட அவர்கள்
வணிகத்திற்கு !
புடை சூழ்ந்த
கருமேகங்களுக்குள் சிக்கிய
முழுமதியானது ..
கல்வியின் நிலை !
பேரங்கள் நடத்தப்பட்டன ..
பணம் கொடுத்து
வாழ்வு தேர்வு செய்யப்பட்டது
வகை அறியாமல் ,
மழலைகளின் நிலையறியாமல் ..
படிப்பிற்கு சம்பந்தமில்லா
பாதைகளை வழிவகுத்துக் கொடுத்தன
பகட்டு பாடசாலைகள் !
இலக்கற்ற குறிக்கோள்கள்
மலிவு செய்கின்றன ,
மாணாக்கர் வாழ்க்கையை !
ஏட்டுக் கல்வியின்
ஏற்றம் சொல்ல முனைவோர்
அருகிப் போயினர் ..
சுதந்திரம் பறிக்கப்பட்ட
கல்வி தெய்வம்
காத்திருக்கிறது ..
கன்னத்தில் இரத்தத் தீற்றல்களுடனும்
நெஞ்சத்தில் தீரா வேட்கையுடனும்
அரும்பெரும் கல்வியை
ஆதிக்கம் செய்பவரை அழித்து
ஆரவாரத்துடன் ஆற்றலுடையவரிடத்தில்
அற்பணிக்கும் தக்க சமயத்தை
எதிர்நோக்கி !