விழி பேசும் மொழி

விழி பேசும் மொழி!
விழி என்ன மொழியோ!
மொழி என்ன பொருளோ!
பழகும் உயிர்க் காதலே
எழுதாதே பழகுமோ!
உணர்வுகள் சொல்லாமல்
உருவான மொழி உண்டோ!
நினைவுகள் எண்ணாமல்
நீர் விடும் விழி உண்டோ!!
உணர்வுகள் விழிக்காமல்
கனவுகள் கண் வளர்மோ!
நினைவுகள் தூங்காமல்
நீள் விழிகள் துஞ்சுமோ!
உணர்வுகள் தூண்டாமல்
ஒழுகி விழி தேடிடுமோ!
நினைவுகள் ஏங்காமல்
நீல விழி வாடிடுமோ!
உணர்வுகள் பேசாமல்
பிரியும் விழி உருகிடுமோ!
நினைவுகளும் கூசாமல்
சேர் விழிகள் மூடிடுமோ!
உணர்வுகள் துள்ளாமல்
கூடும் விழி விரிந்திடுமோ!
நினைவுகள் அள்ளாமல்
நேர் விழிகள் சிந்திடுமோ!
உணர்வுகள் அஞ்சாமல்
ஓர விழி கசிந்திடுமோ!
நினைவுகள் கலங்காமல்
பிரிவெண்ணி உதிர்த்திடுமோ!
கொ.பெ.பி.அய்யா.
குறிப்பு:--அன்பர்களே!
“கரிசல் மண்ணில் ஒரு காவியம்”
அத்தியாயம்—12(179908)
வெளியாகியுள்ளது.படித்துத்தான் சொல்லுங்களேன்!