என் கருவறையில் உன் பாதச்சுவடு -சே பா

பிண்டம் சுமந்த
கருவறையில் நான்
உன்னை உதைத்த போது
நீ ஆனந்தம் அடைந்தாய்!

என் பிள்ளை
என்னை உதைப்பது
பேரின்பம் என்றாய்!

கருவறை பிண்டமாய் உன்
காலடியில் கிடக்கிறேன்
உன் கை தழுவாத
பிள்ளையாய் !

இவ்வுயிர் சுமந்தவளுக்கு
விடை பெறும் பிள்ளையாய்!

அளவற்ற ஆனந்தம்
விதைத்த களஞ்சியம்-நான்
கண்விழிக்கும் வேளையில்
காணாமல் போனதே!

எங்கே என் குழந்தை!

மகனோ! மகளோ!
உன்னை கட்டி தழுவாத
இந்த கரங்கள் பாவம் செய்ததடா!

எவரும் உன்னை காணாமல்
பத்திர படுத்தி வைத்தேன்
பத்து திங்களாய்!

பாவி மகள் பரிதவித்தேன்
பத்து திங்கள் கழித்தும்
என் கண்மணியே!
உன்னை நானும்
என்னை நீயும்
காணாமல் போனதேனோ!

பருவம் கடத்திவந்து
இன்று அன்னை ஆக்கி -நீ
சொல்லாமல் போனதேனோ!

உன் கால்பதித்த
என் கருவறையும்
உன்னை இழந்த
என் மனவறையும்
இன்று ஏக்கத்தோடு!

அம்மா! குழந்தாய்!

========================================
என்றும் அன்புடன் -சே பா ....
========================================

எழுதியவர் : சேர்ந்தை பாபு.த (4-Apr-14, 1:06 pm)
பார்வை : 584

மேலே