பங்காளியும் பகையாளியாய் மாறலாமோ

அசையா சொத்துக் காசைப்பட்டு
அன்பு மனதை அடகுவைத்து
பங்கு பிரித்திடும் வேளையிலே
பங்காளி பகையாளியாய் மாறலாமோ ...??

ஏறக்குறைய இருந்தால் என்ன
ஏட்டிக்குப் போட்டி தேவையோ
ஏற்றுக் கொள்ளும் மனமிருந்தால்
ஏற்றமே என்றும் காண்பீரே .....!!

ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளே
ஒருகொடியில் பூத்த முல்லைகளே
ஒற்றுமையின் பலம் உணர்ந்து
ஒத்த மனமுடன் செயல்படுவீர் ....!!

உலகில் எதுவும் நிலையல்ல
உறவின் புனிதம் உணர்வீரே
உள்ளன்புடன் கூடி செயல்பட்டு
உள்ளதை பங்கிட்டுக் கொள்வீரே ....!!

பாகப் பிரிவினை செய்கையிலே
பந்தப் பிரிவினை ஆகலாமோ
பிறக்கையிலென்ன கொண்டு வந்தோம்
போகையிலென்ன கொண்டு செல்வோம் ?

விருப்பு வெறுப்பு புறந்தள்ளி
விட்டுக் கொடுக்கப் பழகிவிட்டால்
விடை பெற்றிடுமே விசனங்கள்
வீசும் வசந்தம் வாழ்க்கையிலே ....!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (20-Apr-14, 10:47 pm)
பார்வை : 176

மேலே