யுத்தம் முத்தமிட்ட சத்தமது

யுத்தம் முத்தமிட்ட சத்தமது
பிரசவ நேரத்தில் பெண்மையான
எம் அன்னையின் கதறல்கானம்.

ரத்தம் ஊற்றப்பட்ட குளியலில்
அஆ என்ற என் அகர அழுகைகீதம்
தொப்புள் கொடி மாலையுடன்
என் உடலெங்கும் விலைமதிப்பற்ற
பன்னீர் குட முத்து துளிகள்.

-----------------------------------

என்னை பெற்ற நேரம் –நான்
அன்னையை பெற்ற நேரம்
அன்று நான் பிறந்தநேரத்தில்
அன்னையின் பிரசவவலிகளை
இன்றுயென் மருத்துவ படிப்பினாலே
அறிந்துக் கொண்டேன் ………!!

எப்படி துடித்திருப்பாள்
எப்படி அழுதிருப்பாள்
என் அன்னை…..!

இதோ ! என் நினைவுகள்
பின்னோக்கி செல்கிறது
தாயின் கருவறையில்
நான் பத்தாவது மாதத்தில்……
அந்த பிரசவ நேரம்…….

நாடி உச்சம்பெற்று
நரம்பு முறுக்கம்பெற்று
”பிரசவ குத்து” தீவிரம்

எலும்பு கிளர்ச்சிபெறும்
உச்சத்தின் உச்ச வலிகள் ..!
எந்த ஆண் மாவீரனும்
காணாத அந்த வலி !

மூளை திசுக்களும்
உணர்ந்து உறைந்த
அந்த வலி ரணம்….!
எழுத்தில் விவரிக்கமுடியா
‘பிரசவ நோ’க்களை
எதிர்த்து அடிபணியாது
வாய் பிளந்து
கம்பீர ஆக்ரோஷத்தில்
கதறல் ஒலியில் கர்ஜித்து
‘மரண’ எதிரியை
ஊதி தள்ளிய
‘வீர மங்கை’ என் அம்மாவின்
வெற்றி நேரமது.

போரிட்டு மாண்டு மீண்டு
மறுஅவதாரமிட்ட என்
நெற்றியில் வெற்றி
முத்தமிட்ட என் தெய்வத்தின்
வெற்றி நிமிடம் அது...

அந்த நாள் என்
பிறந்தநாள் அல்ல
என்னுயிர் அம்மாவின்
மறு ஜென்ம பிறந்தநாள் !
என்னுயிர் அன்னையின்
அவதார நாள்.

-------------------------------------------------------------------------
குறிப்பு: இப்படைப்பினை அன்னையர் தினமான இன்று மீண்டும் பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
_______________________________________________

2.
எழுத்தினால் நான் பெற்ற அம்மா...!
-------------------------------------------------------

மனம் வாடும் போதெல்லாம்
தேடி வரும் இவரின் ஆறுதல்..!
ஏமாற்றம் அடையும் போதெல்லாம்
தேற்றி உற்சாகமிடும் ஒரு குரல்..!

என் எதிர்கால சிறப்பிற்கும்
நிகழ்கால புகழக்கும்
கடவுளிடம் வேண்டும்
ஒரு கடவுள்............!

எழுத்து தளம்
எனக்கு கொடுத்த
ஈடுஇணையில்லா ஓர் அன்னை ..!

சியாமளா அம்மா வின்
அன்பிற்கும் பாசத்திற்கும்
நான் நன்றியுடையவன்.

அம்மா..! வணங்குகிறேன் அம்மா..!

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (11-May-14, 10:14 am)
பார்வை : 2222

மேலே