காதல் கவிஞர் இரா இரவி

காதல் ! கவிஞர் இரா .இரவி !

கவிதை வழங்கும்
அட்சயப் பாத்திரம்
காதல் !

முக்காலமும்
பாடு பொருள்
காதல் !

மூன்றெழுத்து முத்தாய்ப்பு
மூச்சு இருக்கும்வரை நினைப்பு
காதல் !

ஒன்றும் ஒன்றும்
இரண்டல்ல ஒன்று
காதல் !

கவிதை வரும்
விதையென வளரும்
காதல் !

நினைவலை தொடரும்
மகிழ்ச்சி பரவும்
காதல் !

முகம் மலரும்
அகம் குளிரும்
காதல் !

சிறகுகள் முளைக்கும்
சிந்தனை பறக்கும்
காதல் !

சொல்லில் அடங்காது
சொன்னால் புரியாது
காதல் !

ஊடல் இன்றி
ஒருவரும் இல்லை
காதல் !
திரைப்படத்தில் ரசிப்பு
இல்லத்தில் எதிர்ப்பு
காதல் !

நாவலில் விருப்பு
நம் வீட்டில் வெறுப்பு
காதல் !

நேரடியாக சந்திக்காவிட்டாலும்
நினைவுகள் சந்திக்கும்
காதல் !

கண்களில் தொடங்கி மூளையில் பதிந்து
உதட்டில் வழியும்
காதல் !

இணையற்ற இணை
என்றனர்
எங்களை !

காணமல் போகும்
கவலை
அவள் சிரித்தால் !

இருட்டிலும்
ஒளிர்கின்றன
அவள் விழிகள் !

வாசனை திரவியங்கள்
தோற்றன
கூந்தல் வாசம் !

எந்த ஆடையும்
அழகாகின்றன
அவள் அணிந்தால் !

நின்றால் அழகு
நடந்தால் அழகோ அழகு
அவள் !

ஊட்டம் தரும்
உமிழ்நீர் பரிமாற்றம்
முத்தம் !.

சிமிட்டாமல் பார்ப்பதில்
சிங்காரி வென்றாள்
தோற்றேன் நான் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (27-May-14, 8:57 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 71

மேலே