காதல் கவிஞர் இரா இரவி

காதல் ! கவிஞர் இரா .இரவி !
கவிதை வழங்கும்
அட்சயப் பாத்திரம்
காதல் !
முக்காலமும்
பாடு பொருள்
காதல் !
மூன்றெழுத்து முத்தாய்ப்பு
மூச்சு இருக்கும்வரை நினைப்பு
காதல் !
ஒன்றும் ஒன்றும்
இரண்டல்ல ஒன்று
காதல் !
கவிதை வரும்
விதையென வளரும்
காதல் !
நினைவலை தொடரும்
மகிழ்ச்சி பரவும்
காதல் !
முகம் மலரும்
அகம் குளிரும்
காதல் !
சிறகுகள் முளைக்கும்
சிந்தனை பறக்கும்
காதல் !
சொல்லில் அடங்காது
சொன்னால் புரியாது
காதல் !
ஊடல் இன்றி
ஒருவரும் இல்லை
காதல் !
திரைப்படத்தில் ரசிப்பு
இல்லத்தில் எதிர்ப்பு
காதல் !
நாவலில் விருப்பு
நம் வீட்டில் வெறுப்பு
காதல் !
நேரடியாக சந்திக்காவிட்டாலும்
நினைவுகள் சந்திக்கும்
காதல் !
கண்களில் தொடங்கி மூளையில் பதிந்து
உதட்டில் வழியும்
காதல் !
இணையற்ற இணை
என்றனர்
எங்களை !
காணமல் போகும்
கவலை
அவள் சிரித்தால் !
இருட்டிலும்
ஒளிர்கின்றன
அவள் விழிகள் !
வாசனை திரவியங்கள்
தோற்றன
கூந்தல் வாசம் !
எந்த ஆடையும்
அழகாகின்றன
அவள் அணிந்தால் !
நின்றால் அழகு
நடந்தால் அழகோ அழகு
அவள் !
ஊட்டம் தரும்
உமிழ்நீர் பரிமாற்றம்
முத்தம் !.
சிமிட்டாமல் பார்ப்பதில்
சிங்காரி வென்றாள்
தோற்றேன் நான் !