அரசியல்வாதிகளுடன் இரண்டு இரவுகள்

அரசியல்வாதிகள் என்றாலே இப்படித்தான் என்று முடிவெடுத்துவிட முடியுமா?

அது ஒரு கோடைக்கால இரவு நேர ரயில் பயணம். வருடம் 1990. இந்திய ரயில்வேயின் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சிக்காக நானும் என் தோழியும் லக்னோவிலிருந்து டெல்லிக்கு ரயிலில் பயணமானோம். அதே பெட்டியில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தார்கள். அவர்களால் பிரச்சினையில்லை.

ஆனால், அவர்களுடன் வந்த சுமார் ஒரு டஜன் தொண்டர்கள் பதிவுசெய்யாத பயணிகள். அவர்கள் அடித்த லூட்டி பயங்கரமாக இருந்தது. அவர்கள் எங்களைப் பதிவுசெய்த இருக்கையிலிருந்து நகர்த்தி னார்கள். நாங்கள் கொண்டுபோயிருந்த பெட்டிகள் மீது உட்கார்ந்துகொண்டார்கள். அசிங்கம் அசிங்கமாகப் பேசினார்கள். ஆபாசமாக ஏதேதோ சொல்லிக்கொண்டே வந்தார்கள்.

பயங்கரமான இரவு

நாங்கள் ரொம்பவும் பயந்துபோனோம். கூச்சத்தில் நெளிந்தோம். அடங்காப்பிடாரிகளுடன் அது ஒரு பயங்கரமான இரவு நேர ரயில் பயணம். மறுநாள் காலை ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விட்டபடியே டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கினோம். அரண்டுபோன என் தோழி அடுத்தகட்டப் பயிற்சிக்காக அகமதாபாத் செல்ல வேண்டாம் என்று முடிவுசெய்து டெல்லியிலேயே தங்கிவிட்டார்.

என்னுடன் சேர்ந்து ரயில்வே பணிக்குத் தேர்வான உத்பல்பர்னா ஹஸரிகா என்ற பெண்ணுடன் டெல்லி யிலிருந்து அகமதாபாத்துக்குப் புறப்பட்டேன் (உத்பல்பர்னா இப்போது ரயில்வே வாரியச் செயல் இயக்குநர்). இந்தமுறை பதிவுசெய்த டிக்கெட்டைப் பெற எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. ‘வெயிட்டிங் லிஸ்ட்’ பயணிகளாக அகமதாபாத் செல்லும் இரவு நேர ரயிலில் ஏறினோம்.

டிக்கெட் பரிசோதகரிடம் எங்கள் நிலையைச் சொன்னதும் அவர் எங்களை முதல் வகுப்பு கூபேயில் உட்கார்த்திவைத்தார். இருவர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய கூண்டு அது. ஒரு கீழ் பெர்த், ஒரு மேல் பெர்த். ஏற்கெனவே இரண்டு நபர்கள் கீழ் பெர்த்தில் இருந்தார்கள். வெள்ளைக் கதர் ஆடையைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் அரசியல்வாதிகள் என்பது தெரிந்தது. நான் திடுக்கிட்டேன். என் தயக்கத்தைப் புரிந்துகொண்ட டிக்கெட் பரிசோதகர் “கவலைப்பட வேண்டாம். இவர்கள் வழக்கமாக வரும் பயணிகள். மிகவும் நல்லவர்கள். பயம் வேண்டாம்” என்று ஆறுத லாகச் சொன்னார்.

இனிய இரவு

ஒருவருக்கு 45 வயது இருக்கும். முகத்தில் பாசம் தெரிந்தது. மற்றவருக்கு 35 வயதுக்கு மேலிருக் கலாம். அவர் அதிகம் பேசவில்லை. சலனம் இல்லாதவராக இருந்தார். இருவரும் பெர்த்தின் ஓரமாக நகர்ந்துகொண்டு எங்களுக்கு உட்கார இடம் கொடுத்தார்கள். தங்களை குஜராத் மாநில பா.ஜ.க. தலைவர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பெயர் களையும் சொன்னார்கள். பெயர்கள் அப்போது மனதில் பதியவில்லை. நாங்களும் எங்களை அசாம் மாநிலத்தவர்கள், ரயில்வே அதிகாரிகள் பணிக்குப் பயிற்சி பெறுபவர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டோம்.

ஏதேதோ பேசிக்கொண்டு வந்தோம். பேச்சு வரலாறு மற்றும் அரசியல் பக்கம் திரும்பியது. இந்து மகாசபா முஸ்லிம் லீக் தொடங்கப்பட்ட காலகட்டத்தைத் தொட்டுச் சென்றது. உடன்வந்த தோழி டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் முதுகலைப் பட்டதாரி. நானும் இடையிடையே ஏதோ பேசினேன். மூத்த அரசியல்வாதி உற்சாகமாகப் பேச்சில் கலந்துகொண்டார். இளையவர் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தார். பேசாவிட்டாலும் எல்லா வற்றையும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் என்பது அவரது முகபாவத்தைப் பார்த்ததும் தெரிந்தது.

பேச்சுவாக்கில் ஷ்யாமா ப்ரஸாத் முகர்ஜியின் மறைவு பற்றிக் குறிப்பிட்டு இன்றுவரை அவர் மரணத்தின் மர்மம் விலகவில்லையே என்று சொன்னேன். அப்போது அந்த இளம் அரசியல்வாதி ஆர்வத்துடன் கேட்டார் “ஷ்யாமா ப்ரஸாத் முகர்ஜியை உங்களுக்கு எப்படித் தெரியும்?” நான் சொன்னேன். “அவர் கல்கத்தா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தபோது என் தந்தை அங்கே மாணவர்.”

இதைக்கேட்ட இளம் அரசியல்வாதி தன்னையறியாமல் தனக்கு மட்டும் கேட்கிறாற்போல் மெலிதான குரலில் சொல்லிக்கொண்டார், “பரவாயில்லை, இவர்களுக்கு நிறைய விஷயம் தெரிந்திருக்கிறது.”

அப்போது மூத்த அரசியல்வாதி “நீங்கள் குஜராத் மாநில பா.ஜ.க-வில் சேரக் கூடதா?” என்று கேட்டார். சிரித்து மழுப்பினோம். நாங்கள் குஜராத் மாநிலத்தவர் இல்லையே என்றும் சொன்னோம். அப்போது அந்த இளம் அரசியல்வாதி “அதனாலென்ன? எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. நாங்கள் திறமைசாலிகளை வரவேற்கிறோம்” என்று அமைதியாக, நிதானமாக, திடமாகச் சொன்னார்.

கண்களில் ஒளி

அப்போது நால்வருக்கும் சைவச் சாப்பாடு வந்தது. பேசாமலேயே சாப்பிட்டோம். ரயில் ஊழியர் வந்தபோது, அந்த இளம் அரசியல்வாதி நான்கு பேர்களுக்குமான பணத்தைக் கொடுத்தார். மெலிதான குரலில் நான் நன்றி என்று சொன்னபோது அதை அவர் பொருட்படுத்தவில்லை. தான் உணவுக்குப் பணம் கொடுத்தது, நான் நன்றி சொன்னது இரண்டையுமே அவர் சர்வசாதாரணமாக எடுத்துக்கொண்டார்.

அப்போதுதான் அவரை உற்றுப் பார்த்தேன், அவர் கண்களில் ஒருவித ஒளி தெரிந்தது. யாரும் அதைக் கவனிக்காமல் இருக்க முடியாது. அவர் அரிதாகவே பேசினார். ஆனால், பிறர் பேசியதையெல்லாம் முழுமையாக, பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்.

அந்த நேரம் வந்த டிக்கெட் பரிசோதகர், ரயிலில் காலி பெர்த்கள் எதுவுமில்லை என்றும் தன்னால் உதவ முடியவில்லை என்றும் சொன்னார். அப்போது அந்த இரு அரசியல்வாதிகளும் “பரவாயில்லை, நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று சொல்லிவிட்டார்கள். உடனே, அவர்கள் இருவரும் கீழ் பெர்த்தையும் மேல் பெர்த்தையும் எங்களுக்குத் தந்துவிட்டு கீழே துணியை விரித்துப் படுத்துக்கொண்டார்கள்.

முதல் நாள் இரவுக்கும் மறுநாள் இரவுக்கும் என்ன வித்தியாசம். காலையில் ரயில் அகமதாபாதை நெருங்கியபோது, அந்த இருவரும் நாங்கள் எங்கே தங்கப்போகிறோம் என்று கேட்டார்கள். “வெளியில் தங்குவதற்கு உங்களுக்குப் பிரச்சினை ஏதுமிருந்தால் தயங்காமல் என் வீட்டுக்கு வாருங்கள். எப்போதும் என் வீட்டுக் கதவு உங்களுக்காகத் திறந்திருக்கும்” என்றார் மூத்தவர்.

அதில் நிஜமான அக்கறை வெளிப்பட்டது. அப்போது இளைய அரசியல்வாதி ‘‘நான் ஒரு நாடோடி. எனக்கு வீடு வாசல் கிடையாது. அவரைப் போல் நான் உங்களை விருந்தாளிகளாக அழைக்க முடியாது. ஆனால், நீங்கள் அவர் சொல்வதைக் கேட்கலாம். இந்தப் புதிய ஊரில் அவர் வீட்டில் தங்குவது பத்திர மானதுதான்” என்றார்.

இருவருக்கும் நன்றி சொன்னோம். தங்குவது ஒரு பிரச்சினையாக இருக்காது என்று சொன்னோம். ரயில் நிற்பதற்கு முன்பு நான் என் டயரியை எடுத்தேன். “மீண்டும் பெயர்களைச் சொல்லுங்கள் குறித்துக்கொள்கிறோம்” என்றேன். ஏனென்றால், இந்த இருவரும் அரசியல்வாதிகள் பற்றி நான் கொண்டிருந்த பொதுவான அபிப்பிராயத்தை மாற்றிவிட்டார்கள்.

அந்த இரண்டு இரவு ரயில் பயணத்தைப் பற்றி 1995-ல் ஒரு அசாமிய பத்திரிகையில் எழுதினேன். இரண்டு அசாமிய சகோதரிகளுக்காகத் தரையில் படுத்துத் தூங்கிய அந்த குஜராத் அரசியல்வாதிகளைப் பாராட்டியிருந்தேன்.

இந்த நிகழ்ச்சி நடந்து சில வருடங்களுக்குப் பிறகு, இரண்டு அரசியல்வாதிகளுமே பிரபலமானார்கள். மூத்தவர் 1996-ல் குஜராத் முதல்வர் ஆனார். இளையவர் 2001-ல் குஜராத் முதல்வர் ஆனார். இந்தத் தகவல் அறிந்து ஆனந்தப்பட்டேன். இதையடுத்து இன்னொரு அசாமியப் பத்திரிகை நான் 1995-ல் எழுதிய கட்டுரையை மறுபிரசுரம் செய்தது. அவர்களுடைய பெயர்களை நான் இன்னும் சொல்லவில்லையே? அந்த மூத்த அரசியல்வாதி சங்கர்சிங் வகேலா, இளையவர் நரேந்திர மோடி.

எழுதியவர் : (9-Jun-14, 9:39 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 54

சிறந்த கட்டுரைகள்

மேலே