உன் இதழின் சிரிப்புகளால்

இரவினில் நானெழுதும் பாடல் இது
ஏழிசையில் அடங்காத ராகம் இது
உனக்காக நான் செய்த வேள்விகளால் -
உள்ளத்தில் உதித்திட்ட கீதம் இது!

உன் இமையின் படபடப்பு-
என் இதயத் துடிதுடிப்பு!
உன் இதழின் புன்சிரிப்பு-
என் கனவின் உயிர்த்துடிப்பு!

கலைகின்ற உன் முடிகள்-
காற்றோடு என் மொழிகள்!
ஆடுகிற முந்தானை-
வாடாத மலரிதழ்கள்!

நடை பயிலும் பாதங்கள்-
நடனத்தின் ஒத்திகைகள்!
புடைத்திருக்கும் அழகிரண்டும்
பார்வைக்கு மதுக்குடங்கள்!

இடுப்பழகின் சுற்றளவு-
இல்லாத ஓவியங்கள்!
இவைதவிர உன் அழகு
இல்லை என்னில் உவமைகள்!

பொன்னழகுப் பெட்டகமே!
புன்சிரிப்புக் கற்றவளே!
மனசுக்குள் ஏங்குகிறேன்...
மௌனமாய்ப் பாடுகிறேன்!

விழியினில் நீ சொன்ன பாடல் இது
ஏழிசையும் இல்லாத ராகம் இது
உன் இதழில் மலர்ந்திட்ட சிரிப்புகளால் -
என் நெஞ்சில் படிந்திட்ட கீதம் இது!

21.11.1994

எழுதியவர் : மனோ & மனோ (16-Jun-14, 10:23 am)
பார்வை : 91

மேலே