உன் முகமாய் இரு நூலாசிரியர் புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

உன் முகமாய். இரு.
நூலாசிரியர் : புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
வசந்தா பதிப்பகம், 2/16-6, ஆர்.கே. இல்லம், வசந்த நகர் முதல் தெரு,
ஓசூர்-635109. கிருட்டினகிரி மாவட்டம். 04343-245350 – விலை : ரூ. 80

மரபு மாறாமல் தொடர்ந்து மரபுக் கவிதை எழுதி வரும் வெகு சிலரில் சிகரமானவர் நூலாசிரியர் புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள். பல்வேறு இதழ்களில் இவரது மரபுக் கவிதைகள் படித்து வியந்தது உண்டு. மதுரை வந்திருந்த போது நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு வாய்த்தது. பேசி மகிழ்ந்தோம். பெயரிலேயே தமிழ் இருப்பதால் தமிழ் உணர்வோடு இருக்கிறார். கொண்ட கொள்கையில் மரபு மட்டும் எழுதுவது என்பதில் மிகவும் உறுதியாக உள்ள நல்ல மனிதர்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க. இராமசாமி அவர்களின் அணிந்துரை நன்று. உன்முகமாய் இரு. நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது. முகமூடி அணியாமல் இயல்பாக இரு என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது. மரபுக்கவிதை என்பது நிலவு போன்றது. புதுக்கவிதை என்பது நட்சத்திரங்கள் போன்றது. என்றுமே நட்சத்திரங்கள் நிலவாக முடியாது. நிலவொளியாக கவிதைகள் தமிழ் ஒளி வீசுகின்றன. பாராட்டுக்கள். எல்லாக் கவிதைகளும் எனக்குப் பிடித்து இருந்தாலும் பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு. இதோ.

தமிழ்நாடு அன்று எப்படி இருந்தது என்பதை படம் பிடித்துக் காட்டும் விதமாக முதல் கவிதை வடித்துள்ளார். நீண்ட நெடிய கவிதைகளாக இருப்பதால் முதல் பத்திகள் மட்டும் குறிப்பிட்டுள்ளேன். நூல் வாங்கிப் படித்து முழுவதும் அறிந்து கொள்ளுங்கள்.

அருள்க தமிழன்னையே

காவிரி பொங்கிப் பாயக்
கதிர்நிறை வயல்கள் கொஞ்ச
பூவிரிந் தாற்போல் வீதி
புரிந்திடும் வணிகம் மிஞ்ச
நாவிரி புலவர் மன்றம்
நவின்றிடும் கருத்து விஞ்ச
மாவிரி வேந்தர் மூவர்
மறத்தினில் திகழ்ந்த நாடு!

எதுகை, மோனை, இயைபு நூல் முழுவதும் சொல் விளையாட்டுப் போன்று வித்தகக் கவிதை வடித்துள்ளார். ஊடகங்களில் நடக்கும் தமிழ்க்கொலை கண்டு தமிழறிஞர்கள் அனைவருக்கும் ரத்தம் கொதிக்கின்றது. அதனை மரபில் வார்த்துள்ளார்.

திரைப்படங்கள் தொலைக்காட்சி தமிழைப் பண்பைத்
தினம்கொன்றே அழிக்கிறது என்ன செய்தோம்
அரைகுறையாய் இருந்ததமிழ் இசைய ரங்கில்
அடியோடு அழித்திட்டார் என்ன செய்தோம்
இரையாகிச் செய்தித்தாள் விளம்ப ரத்தில்
இறக்கின்ற தமிழ்காக்க என்ன செய்தோம்
இறைவன்முன் பாடுதற்கும் தடைவி தித்த
இழிநிலையை நீக்குதற்கே என்ன செய்தோம்.

என்ன செய்தோம் என்ற கேள்விகளின் மூலம் சிந்திக்க வைத்து ஏதாவது செய்யுங்கள் என்று வலியுறுத்தி உள்ளார். நாம் ஏதாவது செய்தாக வேண்டும். இந்நிலை இப்படியே தொடர்ந்தால் தமிழ் அழியும் என்ற முன்அறிவிப்பு உண்மையாகி விடும். விழித்தெழுவோம், தமிழ்மொழி காப்போம். கட்சியின் பெயரால் சாதியின் பெயரால் தமிழன் பிரிந்து இருப்பது நன்றன்று என்று உணர்த்தும் கவிதை மிக நன்று.

தமிழனாக நிமிர்ந்து நிற்பாய்
தமிழாநீ முதலில்நீ கட்சி யென்னும்
தளையுடைத்துத் தமிழனாக நிமிர்ந்து நிற்பாய்
தமிழாநீ முதலில்நீ சாதி யென்னும்
தடையுடைத்துத் தமிழனென்னும் பெயரில் நிற்பாய்
தமிழாநீ முதலில்நீ தொண்டன் என்னும்
தாழ்வகற்றித் தமிழ்வீர்த் தமிழன் ஆவாய்
தமிழாநீ முதலில்நீ அடிமை விட்டுத்
தன்மான உணர்வுடைய தமிழன் ஆவாய்!

தமிழ்மொழி உணர்வு, தமிழின் உணர்வு ஊட்டும் விதமாக மரபுக்கவிதைகளால் கவிமாலை தொடுத்து உள்ளார்கள்.

தாக்கித் தகர்ப்பாய் தடை

ஏதிலியாய் வந்தமொழி ஏற்றம் பெறத்தமிழா
ஆதிக்கம் செய்ய அனுமதித்தே – வீதி நின்றாய்
சாதித்த நற்றமிழை சாவதற்கு விட்டுவிட்டாய்
நாதியற்றுப் போவாய் நலிந்து!
உயர்நீதி மன்றத்தில் வழக்காடும் மொழியாக
தமிழ் வேண்டும் என்று நீண்ட நெடிய
போராட்டம் வழக்கறிஞர்கள் நடத்தி விட்டார்கள்.

ஆனால் இன்னும் நடைமுறையில் உயர்நீதிமன்றத்தில் முழுமையாக தமிழ்மொழி இடம் பெறவில்லை என்ற கோபத்தில் வடித்த கவிதை.

நெஞ்சில் நெருப்பாய் நிறுத்து
வழக்கு நமது வழக்கறிஞர் நம்மோர்
வழக்காடல் ஆங்கிலத்தில் வாய்த்தல் – இருக்கன்றோ
சொந்தமொழி செந்தமிழில் சொல்லாத நீதிமன்றம்
இந்நிலத்தில் எற்றுக்கு நீக்கு!

மகாகவி பாரதியார் பற்றி மிக நீண்ட கவிதை 8 பக்கங்களில் மிக அருமையாகவும், பெருமையாக வடித்துள்ளார்கள். அதிலிருந்து சில துளிகள் இதோ!

பாரதியார் யார்?

சாதிகளின் வேரறுக்கத் தன்னு டம்பின்
சதிநூலை அறுத்தெறிந்தே பூணூல் தன்னை
ஆதிதிரள விடனென்னும் கனக லிங்க
அருந்தோழன் மார்பினிலே அணியச் செய்து
வேதியர்கள் பறையரென்னும் வேறு பாட்டை
வெறிதன்னைப் போக்குகின்ற செயலைச் செய்து
சாதித்த புரட்சியாளன் இவனைப் போல
சரித்திரத்தில் பெயர்சொல்ல யாரே உள்ளார்!

தன்னுடைய எழுத்தால் பேச்சால் தமிழகத்தில் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பேரறிஞர் அண்ணா பற்றிய கவிதை மிக நன்று.

பேரறிஞர் அண்ணாவின் எழுத்து

பொடி போடும் அண்ணா எந்த
பொடி போட்டு எழுதினாரோ புரிய வில்லை
படித்துக்கொண் டேயிருந்தால் நாள்கள் போகும்
படித்தேனைக் குடித்ததுபோல் நாவி னிக்கும்
வெடியெழுத்தில் பொடிவைத்த கருத்துக் கோவை
வெற்றுச்சொல் ஏதுமில்லா வியக்கும் சிந்தை
அடித்தெழுத முடியாத அவரெ ழுத்தால்
அடிப்படையே மாறயது தமிழ கத்தில்!

இந்த நூலின் தலைப்பில் கவிதை நூலாசிரியரின் இயல்பை உணர்த்தும் விதமாக ஒப்புதல் வாக்குமூலமாக உள்ளது.

உன் முகமாய் இரு!

என் முகத்தை நானேயேன் மாற்ற வேண்டும்
எல்லோர்க்கும் ஏற்றபடி மாறு என்றே
என்னிடத்தில் ஏன் இவர்கள் சொல்ல வேண்டும்
எதற்காக சமரசம் நான் செய்ய வேண்டும்

முகமூடி அணியாது அவர் முகமாகவே வாழ்ந்துவரும் நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (21-Jun-14, 2:04 pm)
பார்வை : 87

மேலே