அவள் அப்படித்தான்

அலுவலகம் முடித்து அவரவர் வீடு திரும்பும் நேரம் மாலை ஆறு மணி சொச்சம். பேருந்து நிறுத்தத்தில் ஒரே கூட்டம் அலை மோதி நின்றது. தான் ஏறி செல்ல போகும் பேருந்து வருகிறதா என்று தொலை நோக்கில் தலையை சற்றே உயர்த்தி பார்க்கும் கூட்டத்தில் மாலினியும் ஒருத்தி. அவள் இல்லம் செல்வதற்கான பேருந்து வருவதைக் கண்டு சற்றே நகர அவளை இடித்துக் கொண்டு பேருந்தைப் பிடிக்க முன்னேறியவனை

"எரும மாடே கண்ணு தெரியலையா உனக்கு" எரிச்சலுடன் கத்தினாள் மாலினி

மாலினியின் கூச்சலை சட்டை செய்யாதவனாய் பேருந்தில் ஏறி தன்னை திணித்துக் கொண்டான். அவன் இடித்துச் சென்ற தோள் பட்டையில் வலி ஏற்பட்டு தேய்த்துவிட்டுக் கொண்டே பேருந்தினில் ஏறி பெண்கள் இருக்கையின் பக்கம் ஒரு ஓரமாக நின்று கொண்டாள். அருகில் ஒருவன் கையை தூக்கிப் பிடித்த திசையிலிருந்து அருவருக்கத் தக்க கெட்ட வாடை வீசிக் கொண்டிருந்தது.

உவ்வே... உமட்டி எடுக்க முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள். எங்கிருந்து ஏறியதோ அவ்வளவு கும்பல் அந்த பேருந்தில். அவளை நெருக்கி நெருக்கி அவள் நடக்காமலேயே முன்னோக்கி நகர்த்தப் பட்டாள். பின் கழுத்துப் பகுதியில் அருவருப்பான உரசல். சவரம் செய்யப் படாத முகத்தை கொண்டு ஒருவன் அவள் கழுத்தினில் பஸ் ஓட்டத்தில் தெரியாமல் பட்டது போல் வேண்டுமென்றே உரசி குளிர் காய்ந்து கொண்டிருந்தான். இதை உணர்ந்தவளாய் கோபத்துடன் வேகமாக திரும்ப எத்தனிக்கையில் அவள் தலை அவனுடைய மோவாய் பிரதேசத்தை தாக்கி இருக்க வேண்டும்.

"அ..ம்..ம்..மா…" முணகியபடியே அவன் மோவாயைத் தடவிக் கொண்டான்.

தடி மாடே. அரிப்பெடுத்தா எங்காவது சுவர் இருந்தா உன் முகத்த அதுல வெச்சி தேச்சுக்கறது தானே. பொம்பளைங்க முதுகும் கழுத்தும் தான் கெடச்சுதா உனக்கு??" . கத்திக் கொண்டே தன் கைப்பைக்குள் துழாவி ப்ரஷ் ஒன்றை எடுத்தாள் மாலினி. மெல்லிய நார் போன்ற கம்பிகளால் ஆனது. கழிவறையை சுத்தம் செய்யும் ப்ரஷ் சிறிய வடிவில் இருந்தது.

"இந்தா... அரிப்பு போக நல்லா தேய்த்துக் கொள். பஸ்ஸை விட்டு இறங்கும் முன் வாங்கிக் கொள்கிறேன்.” ரகளை செய்பவர்களுக்கென்றே இப்படியான சில பல ஆயுதங்களை எப்போதும் அவள் கைப் பைக்குள் வைத்துக் கொள்வதுண்டு..

"என்ன ரொம்ப ஓவரா பேசறே. தெரியாமத்தான் பட்டுடிச்சி. நான் வேணுமின்னே செய்யல." வேறு எதுவும் சொல்லத் தெரியாதவனாய் செய்த தவறு வெட்ட வெளிச்சம் ஆனதில் அவமானம் பிடுங்கித் தின்ன ஆண்கள் இருக்கைகள் பக்கம் நகர்ந்து கொண்டான்.

"விடாதீங்க இன்னும் நல்லா கேளுங்க. இது மாதிரி நடந்துக்கரவங்கள சும்மா விடக்கூடாது" இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்த ஒரு பெண்மணி இப்படி கூறவும் மாலினிக்கு இன்னும் கொதிப்பேறியது.

"ஓ……." மத்தவங்களுக்கு ஒண்ணுன்னா நீங்க கேக்க மாட்டீங்களோ?. உங்களுக்குன்னு பிரச்சினை வந்தாத்தான் கேட்பீங்களோ?? இதுனாலதான் கேவலமான ஜென்மங்கள் பெண்கள உரசறதும் கேலி செய்யறதும் கற்பை சூறை ஆடுறதும் நாட்டுல பெருத்துப் போச்சு. மத்தவங்களுக்கு நடக்கும்போது நமக்கென்ன வம்புன்னு பாத்துக்கிட்டு கெடந்தா நாளைக்கு உங்களுக்கும் இது போலதான் நடக்கும். அப்ப யாரும் உங்களுக்காக பேச வர மாட்டாங்க. அந்த இடத்துல நான் இருந்தா என்னைத் தவிர.”

மாலினி இப்படி கோபத்துடன் கத்தவும் அங்கிருந்த பெண்களுக்கு அப்போதுதான் உரைத்தது. "அந்த ஆள நாலு சாத்து சாத்தறேன் பாரு. மானம் கெட்டவன். இருக்கையிலிருந்து எழுவதும் உட்காருவதுமாய் அவனை அடிக்க திமிருபவள் போல் எகிறிக் கொண்டிருந்தாள் ஒருத்தி.
"இவ்வளவு பேசறோம் சூடு சொறன இல்லாம இன்னும் நிக்குது பாரு இதுவும் ஒரு ஜென்மம்னு" நின்று கொண்டிருந்தவர்களில் ஒருத்தி இப்படி கத்தவும், இதற்கு மேலும் பிரயாணிப்பது உசிதமில்லை. இப்படியே தொடர்ந்தால் அடி கூட விழும் என்ற பயம் வந்துவிட அடர்ந்த அந்த கும்பலை கடந்து அடுத்து வந்த பஸ் ஸ்டாப்பில் இறங்கிக் கொண்டான் அந்த உரசல் மன்னன்.

"என்னம்மா அங்க ஒரே சத்தம்" கண்டக்டர் கேட்டுக் கொண்டே வர---- “வாங்க.. கண்டக்டர் சார். கிளைமாக்ஸ் காட்சிக்கு சரியா வந்துட்டீங்க.”

அட நீயாம்மா. இன்னிக்கி எவன் மாட்டுனான் உன்கிட்ட. போன வாரம்தான் ஒருத்தன ஹேர் பின்னால குத்தி ஓட வெச்சே. கண்டக்டர் இப்படிக் கூறவும் "ஏன் அப்படி செஞ்சேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும் இல்லையா"?? நான் என்ன வேணும்னா அப்பிடி செஞ்சேன்?? சொல்லுங்க...."
கோபக் குழைவோடு அதே சமயத்தில் சற்று தணிந்த குரலில் மாலினி இப்படிக் கேட்கவும்,

" நீ செஞ்சது தப்பில்லேம்மா. தப்பே... இல்ல.... உன்ன மாதிரி இப்படி தைரியமா இருந்துட்டா பஸ்ல தடிப் பசங்க செய்யற ரகள கொஞ்சமாவது குறையும். நான் உன்ன ஒன்னும் கேட்க மாட்டேன். நடத்து... நடத்து... கையை ஆட்டிக் கொண்டே தன் இருக்கையில் கண்டக்டர் அமரவும் மாலினி இறங்க வேண்டிய இடம் வரவும் இறங்கிக் கொண்டாள்.

இறங்கியவள் அங்கே சாலையோரம் நின்றிருந்தவன் அருகில் சென்று அவ்வளவு பேர் முன்னிலையில் அந்த இளைஞனின் கைகளை இறுகப் பற்றிக் கொள்ளவும் அவளோடு அதுவரையில் பயணித்து அவள் பின்னால் நடந்து வந்துகொண்டிருந்த ஒருவனுக்கு அவளது செய்கை கடுபேற்றியது.

"என்னடா இவ. பஸ்ல கழுத்துல முகம் பட்டத்துக்கு அவன அந்த காட்டு காட்டுனா.. இப்ப என்னடான்னா இவ்ளோ பேர் இருக்க எடத்துல அப்படி என்ன அவன் கைய புடிச்சிக்கிறா?? என்ன பொண்ணுடா இவ. புரிஞ்சிக்க முடியலே". மாலினியை தொடர்ந்து வந்தவன் கடுப்புடன் அவன் நண்பன் கார்த்தியிடம் கூறும் நேரத்தில், அந்த கண் தெரியாதவனை பேருந்து நெரிசலான சாலையை கடக்க மாலினி உதவிக்கொண்டிருந்தாள்.

"நீ புரிந்து கொண்டது அவ்வளவுதான்" அவள எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியும்.

"உனக்கு ரொம்ம்ம்ம்பப் புரியுமோ" இப்படி விஷமமாய் அவன் கேட்கவும், "ம்ம்ம்ம்ம்". என்ற வார்த்தையுடன் கார்த்தியின் இதழ்களில் குறு நகையோடியது. அந்த குறு நகையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது.

எழுதியவர் : சொ. சாந்தி (5-Jul-14, 12:10 pm)
Tanglish : aval abbadiththan
பார்வை : 227

மேலே