நரை நல்லது

வயது முப்பதை தாண்டும் போது, அங்கொன்றும் இங்கொன்றுமாய் நரை விழுந்த போது மனதில் கவலையும் விழுந்தது. நண்பர்களோ இது கவலை நரை என்றார்கள். வேறு சிலரோ இது இளநரை என்றார்கள். மனைவியோ இது இயற்கை, நரை வந்தால் முதிர்வு ஆரம்பமாகிறது என்றாள்.

ஆனால், எனக்கு கவலை என் நரை தான். ஐந்தாறு ஆண்டுகளிலேயே நரையானது தரையில் கொட்டிய எண்ணெய் மாதிரி தலை முழுவதும் பரவியது.

நண்பர்கள் ஆலோசனையின் பேரில் கருஞ்சாயம் பூசினேன். எல்லோரும் டக்கரா இருப்பதாகச் சொன்னார்கள்.

ஆனால், எனக்கு அலர்ஜி வந்து கண்களை பதம் பார்த்தது.

தலையெல்லாம் சொறி மாதிரி அரித்தது. மேலதிகாரி என்னிடம் கேட்கும் நன்றாக பதில் தெரிந்த கேள்விக்கெல்லாம் கூட தலையை சொரிந்து கொண்டே பதிலளித்தேன். அவர் முறைத்தார்.

என் மனைவியோ, அப்போதே சொன்னேனே கேட்டீயா என்றாள்...

எனக்கு மிகவும் உற்ற குடும்ப நண்பர் ஒருவரின் மகள், " மாமா நீங்க டை அடிச்சது நல்லா இல்லை. நரையோடு இருந்தது தான் ஒரு மெஜஸ்டிக்கா இருந்தது " என்றாள். நான் வெட்கி தலைகுனிந்தேன்.

ஒரு தடவை கருஞ்சாயம் பூசியதோடு அப்படியே விட்டுவிட்டேன். தலைமுடியின் அடிப்பகுதி வெண்மையோடு வெளியே வந்தது, டை அடித்த வில்லங்கம் அப்பட்டமாய் தெரிந்தது.

என் குணாசியத்தை நன்கு புரிந்த வெளியூர் நண்பர்கள் எதேச்சையாக என்னை பார்க்கும் போது,

என்ன குணசேகரா தலைக்கு "டை" யா ? " நீ"யா...?
அடே மடையா ? டையெல்லாம் அடிச்சிருக்கே..? உனக்கு தேவையா இதல்லாம்..?
இளமை மீது அத்தனை ஆசையா?

கிண்டல்கள் என்னை குத்திக் குடைந்தெடுத்தன.

கொஞ்ச நாள் தான்... தலை செம்பட்டை நிறத்திற்கு வந்தது.

மாதம் ஒரு முறையாவது மாவட்ட கலெக்டர் அவர்களை சந்திக்கும் பதவியில் உள்ள நான் அவருடன் நேரில் அருகில் நின்று பேசும் போது என் முகத்தை பார்த்து பேசாமல், செங்கப்பி நிறத்தில் இருந்த என் தலையையே பார்த்து பேசினார். அவர் மனதிற்குள் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.

பார்த்தேன்... ஒரே ஐடியா தான்....கோவிலுக்கு வேண்டுதல் போட்டேன். ஒரே போடு.. மொட்டை தான்... மொட்டை தலையோடு அலுவலகம் வந்தேன்.

பழையபடி தலையில் முடி முளைத்தன. நல்ல வெள்ளை நிறத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் கரு முடிகள்.

சாயம் வெளுத்தது.

தேவையா இது என்று என் மனைவி தலையிலேயே அடித்தாள்... (அவள் தலையில் அல்ல, என் மொட்டைத் தலையில் )

முழுவதுமாய் முடி முளைத்தது. வெண்ணிற அருவிகள் கலந்தபடி இடையிடையே கருமுடிகள் கரும்பாறைகளாய் தெரிந்தன... கொஞ்சம் மெஜஸ்டிக்.குடன் (!) டை.யை கைவிட்டேன்...

நரையும் திரையும் இயற்கை..

முதுமை வரும்போது மாற்றம் என்பது மாறாதது...

மனைவிக்கும் மகிழ்ச்சியாய் போனது...

இயற்கைக்கு மாறாக மனிதன் நிகழ்த்திட நினைக்கும் எந்த செயலுக்கும் எதிர்வினை உருவாகி
அது நிம்மதியின்மையை கொடுக்கும்...(புத்தி வந்ததா?)

எனவே தான்...
நான் குறுகிய காலத்திலேயே உணர்ந்து கொண்டேன்,

ந ரை ந ல் ல து...

எழுதியவர் : பா.குணசேகரன் (5-Jul-14, 7:02 pm)
சேர்த்தது : பா குணசேகரன்
Tanglish : narai nallathu
பார்வை : 135

மேலே