கடலின் காதல் அறிவுரைகள்
எழுவாய் விழுவாய் -பின்
அலையென அழுவாய்
உனை தொழுவார் இன்றி
உன் மேனி தொடுவார்
தொடு வானம் சேலை உடுத்தியும்
நிர்வாணமாய் நிற்கும் உன் அழகு!
விழுவார் பின் எழுவார்
காதலர் தொழும் கன்னியரே !
கண்ணீர் காணும் முன்
எம் தண்ணீர் பருகிடுவீர்
பெண்டீர் விட்ட கண்ணீரால்
பெருங் கடலான கன்னி நானே !
இன்பத்தில் ஆரம்பிக்கும்-பின்
துன்பத்தில் மூழ்க வைக்கும்
ஆசை அலையிலே ஆர்ப்பரிக்கும்
அடங்கிய பின் கண்ணீர் கரிக்கும்
காதலெனும் மாயை மானை துரத்தாதே !!
வீண் உளைச்சலில் நீந்தாதே!
நாலாபுறம் வீசும் தென்றல்
சூரா வளியாக்காதே
சுழலில் சிக்கி- பின்
என் மேனியில் வந்து விழுகாதே!!
நாற்புறமும் கரைகள் தேடி
மேனியில் பட்ட கறைகள் கோடி
சிரிக்கும் போதும் கரை ஒதுங்குகிறாய்
மரிக்கும் போதும் கரை ஒதுங்குகிறாய்
உண்மை அறிந்தும் உணர மறுக்கிறாய் !!
கைகோர்த்து நீ நடந்தால்
கண்ணில் முட்டும் நீரெனக்கு
கரை சேர்க்கும் நாளை எண்ணி
கண்ணீரோடு பெற்றவர்கள்
கன்னி நீ பெற்ற வரம் தான் என்ன ?
அனுபவித்தவன் சொல்லும் சொல்லை
அகத்துனுள் போட்டு வை
தனிமை நிலை வாய்க்கும் போது
கரைசேர்க்கும் படகாய் உனக்கது உதவக் கூடும் !