பூக்களோடு ஒரு கைகுலுக்கல்

புன்னகை விற்கும் சந்தை என்னும்
==பூங்கா வனத்தில் நின்ற நேரம்
மின்னிடும் வண்ணம் மெல்ல இழந்து
==மெல்லிய இதழ்கள் உதிர்ந்த சோகம்
தன்னை எண்ணி வருந்திய பூக்கள்
==தன்மை கண்டு கலங்கியே அவைக்கு
என்னிரு கைகள் நீட்டி ஆறுதல்
==இதமாய் வழங்க வாழ்த்துச் சொன்னேன்
உதிர்வை பார்த்து வாழ்த்துக் கூறும்
==உள்ளம் கொண்ட கொடிய மனிதா
உதிரும் எமக்கு கைகள் நீட்டி
==உதிர்த்த வாழ்த்தால் என்ன உணர்ந்தாய்?
அதிர வைத்தது பூக்களின் கேள்வி.
==அடடா என்னக் கொடுமை செய்தேன்
புதிராய் வந்து புயலாய் தாக்கி
==பூக்கள் சாய்த்து விட்டன என்னை.
ஆறுதல் என்பது வாழும் போதில்
==அளிக்க வேண்டும். .சாவில் அல்ல.
மாறுதல் காண்பாய் மனிதா நீயும்
==மறுபடி வந்து கூறிய பூக்கள்
சோறுடன் உப்பை சேர்த்தே உண்பாய்
==சூடு சொரணை வரலாம் என்றே
கூறிய படியே கைகள் நீட்ட
==கொடுத்துக் கையை குலுக்கிய நானும்
உதிர்ந்தேன் பூக்களின் காலில் சருகாய்.!
*மெய்யன் நடராஜ் (இலங்கை)