உள் மனக் காடுகளில்

அந்தரங்க மிருகங்களின்
ஓயாத அட்டகாசம்
உள் மனக் காடுகளில் ..

அதிகார முறுக்கில் செருக்கித் தருக்கும்
ஆணவத் திமிரின்
சிம்ம கர்ச்சனைகள்

உறக்கதிலும் விழிகளில்
செந்தீயின் அலைபுரளும்
கடுங்கோபத்துப் புலி உறுமல்கள்

கண்ணவியப் பண்ணுகிற
காமவெறி யருவருப்புக்
கரடிக் கூப்பாடுகள்!

ஒரு போதும் நிறைவின்றித்
திரியவிடும் பேராசை
ஓநாய்க் கூச்சல்கள் !

நாட்பட்டது என்று நாணாது
அடுத்ததன் மிச்சம் புசித்து
வயிரு வளர்க்கும் சுயநல
நரி ஊளைகள்!

மூளை வறண்ட மூட நம்பிக்கை
முரட்டுக் காட்டெருமை
மூர்க்கத் தாக்குதல்கள்!
என்று ஒரே அழிச்சாட்டியங்கள்
உள்ளே ….

எல்லாம் ஒரு தவ நெருப்பில்
பற்ற வைத்த
ஞானஜோதிச் சுழல் வீச்சில்
துவம்சமாக
ஈனமழிந்து காடு
பூச்சொறியும் நந்தவனமாக …

எழுதியவர் : தேனரசன் (29-Jul-14, 9:39 pm)
பார்வை : 167

மேலே