இது தான் கவிதையாMano Red

எதுகை மோனை
இயைபுகளுடன்,
எதற்கும் உதவாத
இயல்பு மீறிய வார்த்தைகளில்
எதைச் சொன்னாலும்
அதுதான் கவிதையா...??

ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சங்களுடன்,
கூறு கெட்ட
கருத்துக்களை சொல்லி
கவிஞரென தன்னைத் தானே
புகழ்வது தான் கவிதையா..??

வாய்க்கு வந்ததை
வரிக்கு வரி சொல்லி,
மேலும் கீழுமாக
நான்கு வார்த்தைகளை
கடித்து துப்பி
கூறுவதுதான் கவிதையா..??

அந்தமும்
சந்தமும் பார்த்து
கவிதை சொல்ல வருபவர்கள்,
சொந்த பந்த
சமூக இழிவுகளை
மறைப்பது தான் கவிதையா...??

இரட்டை கிளவி சொற்களை
புரட்டிப் போட்டு
பளபளப்பாக கவியெழுதி
புரட்சி கவியென்று
சுய விளம்பரம்
செய்வது தான் கவிதையா..??

சொற்சுவை,
பொருட்சுவையுடன்
இலக்கண விதிகள் குழைத்து
விதைக்கப்படுவது மட்டும் தான்
ஆகச் சிறந்த கவிதையா..??

இவைகள் ஏதுமின்றி
ஊமை நினைவுகளுக்கு
உருவம் கொடுக்கும்
அத்தனை எழுத்துக்களும்
கவிதை இல்லாமல் போனாலும்
கவிதை சேராத
கவிதை தான் இது..!!

எழுதியவர் : மனோ ரெட் (8-Aug-14, 8:23 am)
பார்வை : 271

மேலே