வெற்றிக்குப் பின்னால்

வெற்றி....! தேடலின் தீர்வாக
வரையறுக்கப் படுவது.....!!
எத்தனை பேருக்கு
எப்படியெல்லாம்.... விசித்திரமாய்...
போர்க்களத்தில் ரத்தம்
ஒழுகச் சொல்லியிருக்கிறான்..... வெற்றி...!!
செடிகள் நட்டவன்
பூக்கள் கண்டதும்
சொல்லியிருக்கிறான் ....... வெற்றி....!!
திருடனுக்கு எளிதில்
அடைவதாகிறது.....
உழைப்பவனுக்கு
ஒருபோதும் முழுமையாக
கிடைத்திராத............ வெற்றி...!!
வெற்றிகளின் வெளிச்சத்திற்கு
எப்போதும்
பின்புலங்கள் துழாவுவதே
குறி...!!
ஒரு செய்தித்தாள்
சொல்லும் ... இவர்
தொழிலாளியின் மகன்.....!!
ஒரு பண்பலை வானொலி
சொல்லும்... இவள்
பூக்காரியின் மகள்......!!
ஒரு தொலைக்காட்சி
அலைவரிசை சொல்லும்... இவரின்
அம்மா.. கழிவறைத் துப்புரவாளி...!!
இவர்கள்
விவசாயக் குடும்பம்....!!
பால்காரர்... !!
விளக்கு வெளிச்சம்...!! இப்படியாய்
கோணங்களும் வேறுபட்டிருக்கும்
அவைகளில்....!!
ஒவ்வொரு ஊடகமும்
ஒவ்வொரு செய்தி...!!
எல்லா ஊடகத்திற்கும்
ஒரே கோணம் .... இப்படி....
வெற்றியாளன் ஒரு
" தலித்து".....!!
எதில்...? எதற்காக.... ?
எங்கிருக்கிறது... வெற்றி...?!
மூன்றாம் வகுப்பில்
வேண்டாம்.... அங்கு அது
இருப்பதில்லை...!!
முதுநிலைக் கல்வியில்
வைத்திடுங்கள்..........
" சாதிகள் இல்லையடி பாப்பா"....