அவன்

எல்லோரும்
என்னை ஏன் ஒரு
செல்லாகாசு போல
பார்க்கிறீர்கள்?
நானும் ஒரு காலத்தில்
உங்கள் மத்தியில்
மதிப்பாய் தானே இருந்தேன்!..

என்னை
பார்த்து சிரித்த
என்னுடன் விளையாடிய
பொம்மைகள், வேறு அறைக்கு
இடம்பெயர்ந்ததேன்?
இப்பொழுது
அவைகளுக்கு என்னை
பிடிக்கவில்லையா?

அம்மா, நீ ஊட்டிய
பாகற்காய் கூட
இனித்ததே எனக்கு,
உன் விரல்கள் பட்டதால்....
இப்பொழுது
அவ்விரல்கள் எனக்கு
சொந்தமில்லையா?

அப்பொழுது
உன் மடி இருந்ததால்
எனக்கு
தலையணை கூட
வாங்கவில்லையே!
இப்பொழுது
எனக்கு ஏன்
இந்த இரண்டு மூன்று
தலையணை?

அப்பா
உங்கள்
தோள்களில் சாய்ந்தபடி
கன்னம் பதித்து
நிலா என்று கூட
தெரியாமல் அதை
ரசிப்பேன !
இப்பொழுது நான் போகட்டும்,
அந்த நிலா
உங்கள் கண்ணில்
படவில்லையா?
என் நினைவை ஊட்ட!

என் அம்மா,
என் அப்பா,
என் பொம்மைகள்,
என் மகிழ்ச்சி,
என் உறக்கம்,
என் நிம்மதி,
எல்லாவற்றையும்
திருடியவன்
அவன் தான்
அவன் ஒருவன் தான்!
அவன் ஏன்
பிறந்தான்,
எனக்கொரு தம்பியாக?.....



எழுதியவர் : ராஜசேகரன் (16-Jun-10, 1:59 pm)
Tanglish : avan
பார்வை : 518

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே