குச்சிக்காலன் 5

குச்சிக்காலன் 5
குச்சி வேலையில் சேர்ந்து இரண்டு வருடம்தான் ஆகிறது. ஆனால் அவன் வயதோ இருபத்தெட்டு. அவன் தந்தையே தனது முப்பதைந்தாவது வயதில் தான் திருமணம் செய்துகொண்டார். சொந்த ஊரில் அழகான தனக்கேற்ற பெண்கள் இருந்தும் அந்த ஊரிலுள்ள பெண்கள் பலரும் வலைவீசி மாப்பிள்ளைகளைத் தாங்களே தெர்ந்தெடுப்பதில் கைகாரிகள் என்பதால் ஒப்பிலியின் பெற்றோர்கள் சிரமப்பட்டுத் தேடி வெளியூர் பெண்ணைத்தான் தங்கள் மகனுக்கு மணம் செய்துவைத்தார்கள். அந்த ஊருக்குப் பெண் பார்க்க வருவதையே வெளியூர்காரர்கள் தவிர்த்தார்கள்.
அந்த நிலையில் தங்கள் மூத்த மகன் ஒரு பெண்ணின் காதல் வலையில் விழுந்ததை எண்ணி குச்சியின் பெற்றோர்கள் மிகவும் வேதனைப்பட்டார்கள். நல்ல வேளை தங்களுக்குப் பெண்பிள்ளைகள் ஏதும் இல்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். பெண்பிள்ளைகள் இருந்து குச்சி செய்த வேலையை அவர்களில் யாராவது ஒருத்தி செய்திருந்தால் அவர்களால் அதை ஜீரணிக்க முடியாது. ஊரோடு ஒத்து வாழ் என்பதை அவர்கள் அறிந்தவர்கள் தான் என்றாலும் பிள்ளைகளே தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்வதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அச்செயலை அவர்கள் ஒழுக்கங்கெட்ட செயலாகத் தான் கருதினார்கள்.
அதே போல திரைப்படம் பார்க்கும் விஷயத்தில்கூட
தஙகள் பிள்ளைகளிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொண்டார்கள். “ஊமப்படம் வந்த நாள்ல இருந்து இன்னிக்கு வரைக்கும் சினிமாவ்லெ என்னத்தக் காட்றானுக….தூ.. சினிமாவ்ல ஆம்பளையும் பொம்பளையும் கண்ட எடத்லெ பலபேரு பாக்கறமாதிரி கட்டிப்பிடிச்சுப் பொறலறாங்க. ஒடம்பக்காட்டிப் பொழப்பு நடத்தறானுக…. தூ…. அதெல்லாம் ஒரு பொழுது போக்காம். மானங்கெட்டவனுக. விபச்சாரம் செய்யறவ ங்ககூட யாருக்கும் தெரியாம மறவாத்தாம் இருக்காங்க…” என்றும் இன்னும் மோசமாகவும் சொல்லுவார் ஒப்பிலி சினைமா பற்றி யாராவது பேசினால். குச்சியும் பள்ளிப் பருவத்தில் திருட்டுத்தனமாக தன் அப்பா வெளியூர் செல்லும் நாட்களில் உள்ளூர் டூரிங் டாக்கீஸில் பல திரைப்படங்களைப் பார்த்திருக்கிறான். ஆனால் (ஒப்பிலியின் பாஷையில்) குச்சிப்பையன் செய்த ஒழுக்கங்கெட்ட வேலையெல்லாம் தன் தந்தைக்குத் தெரிய வந்து செம்மையாக அடி வாங்கியிருக்கிறான். அந்த விரத்தழும்புகளை இன்றும் குச்சியின் முதுகில் பார்க்கலாம்.
குச்சியின் பிடிவாதம் மற்றும் தற்கொலை மிரட்டல்
அவன் பெற்றோரை அதிர்ச்சிக்கு ஆளாக்கி கலாவல்லியைக் குச்சிக்கு மணமுடித்து வைக்கும் நிலைக்குத் தள்ளியது. மனம் ஒத்த மனைவி கிடைத்தவுடன் குச்சி சென்னையில் இல்லற வாழ்க்கையைத் துவக்கினான். புதுமணத் தம்பதிகளின் ஆறுமாதத் தேனிலவு வாழ்க்கை மாலை நேரங்களில் சென்னையில் உள்ள திரையரங்குகளிலேயே கழிந்ததென்று கூறலாம். சினிமாப் பார்ப்பதைக் கவுரவக் குறைச்சாலாகப் பார்க்கப்பட்ட பட்டிக்காட்டில் பிறந்த கலா-குச்சி தம்பதியினர் சென்னை வந்ததும் பசியால் காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் புகுந்தால் என்ன செய்யுமோ அந்த வேலையைத்தான் செய்தனர். தினம் ஒரு திரையரங்கு என்று உல்லாசமாக குச்சியாரின் மணவாழ்க்கைக் கழிந்தது. ஒரு வருடம் பூலோக சொர்க்கமானது அவர்களது சென்னை வாழ்க்கை.
அவ்வப்போது போண்டா மூக்கி கலாவல்லியின் பெற்றொர்களும் மற்றும் அவளது உறவினர்கள் மட்டுமே விருந்தினராக வந்து சென்றனர். அவர்கள் எப்போது வந்தாலும் விருந்தோம்பலும் தடபுடலாக இருக்கும். குச்சி தன் திருமணத்திற்குப் பிறகு தன் பெற்றோர்க்கு எந்த உதவியும் செய்யவில்லை. கலாவின் தலையணை மந்திரத்தில் கட்டுண்டவன் தன் பெற்றோருடன் உள்ள உறவையே அறுத்தெரியத் துணிந்துவிட்டான். மாப்பிள்ளைகளை அவர்களது பெற்றோர் மற்றும் உடன்பிறப்புக்களிடமிருந்து பிரிப்பது கலாவல்லி குடுமபத்தைச் சேர்ந்தவர்களுக்கு கைவந்த கலை. திடீரென்று ஒரு நாள் கலாவல்லி அதிர்ச்சியுறும் சம்பவம் நடந்தது…….
(தொடரும்)