அன்பு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பத்துமாதம் நமைசுமந்து பாசம் காட்டி
---பசிவந்தால் தன்ரத்தம் பாலா யூட்டி
சத்துபல சேர்ந்திடவே நமைவ ளர்த்துச்
---சந்தோசப் படுமன்பு தாயின் அன்பு !
வித்தகனாய் நாம்வளர வெற்றிப் பதை
---விதவிதமாய் நிதம்காட்டி பெருமை கூட்டி
எத்திசையும் நமைப்புகழ வைக்கும் அந்த
---ஏற்றமுடைய பெருமன்பு தந்தை அன்பு !

நல்லவையே நம்மனதில் என்றும் வைத்து
---நலிவுகளை உளம்விட்டுக் களைந்து ! நித்தம்
வெல்வதற்காய் வழிவகுத்து நன்மை தந்து
---வெற்றிதரும் தூயன்பு ஆசா னன்பு !
வல்வினையால் கேடேதும் வந்தால் கூட
---வல்லதொரு சக்தியினால் அதனை நீக்கி
அல்லலினை அறுத்தேதான் அருளும் தந்து
---ஆருயிரைப் பேணுமன்பு ஈச னன்பு !

நெல்வயலை நிதமுழுது மணிவி தைத்து
---நன்னீரை நாள்தோறும் அங்கே ஊற்றி
நல்லுலகின் பசிப்பிணியை நீக்கி என்றும்
---நல்லவையே தருமன்பு உழவ னன்பு !
சொல்லினிதாய் சுவையினிதாய் நாளும் கட்டி
---சொப்பனத்தில் கற்பனைகள் எழுத்தில் சேர்த்து
எல்லையில் லாதமிழை பேணி யேதான்
---ஏற்றங்கொ டுக்குமன்பு புலவ னன்பு !

அழைக்காம லேவந்து மண்ணில் உள்ள
---ஆருயிர்கள் ஆயிரத்தை வளர்க்கத் தூவும்
மழையன்பு ! மறையன்பு ! மேகக் கன்னி
---மசக்கையில் பிறக்கின்ற இயற்கை யன்பு !
பிழையாக நட்புகொண்டு உள்ளொன் றுவைத்து
---புறம்பாக வேறொன்று பேசி நின்று
விழைவதெலாம் தீமையினை விளைக்க எண்ணி
---விதித்துன்பம் தருமன்பு செயற்கை அன்பு !

பனித்துளியும் புல்மேலே கொண்ட அன்பு
---பாசாங்கு இல்லாத பசுமை யன்பு
இனிப்புடைய தேன்துளியும் மலரின் மேலே
---இயல்பாகக் கொண்டஅன்பு இனிமை அன்பு !
நனிபசுவும் பால்போழிந்து நவில்வ தெல்லாம்
---நன்றிஎதிர்ப் பார்க்காத நன்மை அன்பு
கனியொத்தத் தமிழ்மொழியின் கவிதை எல்லாம்
---காரிருளைப் போக்குகின்ற தனிமை அன்பு !

தன்மனதில் துயர்வந்து ஆட்கொண் டாலும்
---தனக்குள்ளே அதைமறைத்து ஊரார் சிரிக்க
என்னென்ன வோசெய்யும் கோமா ளிகளும்
---எப்பொழுதும் காட்டுமன்பு ஈடில் அன்பு !
என்கவிதை முற்றிற்று அதுவும் இங்கே
---எழில்தமிழில் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்று
இன்னுலகில் அன்பென்ப தெல்லோ ருக்கும்
---இன்றியமை யாதமையும் கேடில் செல்வம் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (8-Nov-14, 5:12 pm)
பார்வை : 105

மேலே