யார் ஊனம்

படித்ததில் பிடித்தது

கடைசி வரிகளில் கண்கலங்காமல் இந்தக் கதையைப் படிக்கவும்

நாய்க்குட்டிகள் விற்பனைக்கு
‘நாய்க் குட்டிகள் விற்பனைக்கு’ என்று எழுதிய பலகையை தனது கடைக் கதவுக்கு மேல் மாட்டிக் கொண்டிருந்தார்
அதன் உரிமையாளர்.

அந்தப் பலகை
குழந்தைகளை ஈர்க்கும் என்று நினைத்தார் அவர்.

அதன்படியே ஒரு சிறுவன், கடையின் முன் வந்து நின்றான்.
"நாய்க்குட்டிகளை நீங்கள் என்ன விலைக்கு விற்கப் போகிறீர்கள்?" என்று கேட்டான்.

"முப்பது டாலரிலிருந்து ஐம்பது டாலர் வரை" - கடைக்காரர் பதில் சொன்னார்.

அந்தக் குட்டிப் பையன் தனது பேண்ட் பைக்குள் கைவிட்டுக் கொஞ்சம் சில்லறைகளை எடுத்தான்.
"எங்கிட்ட 2.37 டாலர் இருக்கு. நான் நாய்க்குட்டிகளைப் பார்க்கலாமா?" என்று கேட்டான்.

கடை உரிமையாளர் புன்னகைத்து, உள் பக்கம் திரும்பி விசிலடித்தார். நாய்க் கூண்டிலிருந்து ஒரு பெண் இறங்கி நடைபாதை வழியாக ஓடி வந்தாள்.
அவளுக்குப் பின்னால், முடியாலான பந்துகளைப் போல ஐந்து குட்டியூண்டு நாய்க்குட்டிகள் ஓடிவந்தன.
ஒரு குட்டி மட்டும் மிகவும் பின்தங்கி மெதுவாக வந்தது.
பின் தங்கி, நொண்டி நொண்டி வந்த அந்தக் குட்டியை உடனே கவனித்த சிறுவன்,
"என்னாச்சு அதுக்கு?" என்று கேட்டான்.

அந்தக் குட்டி நாயைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர், அதற்குப் பிற்பகுதி சரியாக வளர்ச்சி யடையவில்லை. எனவே எப்போதும் நொண்டித்தான் நடக்கும், முடமாகத் தான் இருக்கும் என்று கூறிவிட்டதாக விளக்கினார் கடைக்காரர்.

சிறுவனின் முகத்தில் ஆர்வம்.
"இந்தக் குட்டிதான் எனக்கு வேணும்."
"அப்படின்னா நீ அதுக்குக் காசு கொடுக்க வேணாம். நான் அதை உனக்கு இலவசமாகவே தர்றேன்" என்றார் கடைக்காரர்.

அந்தக் குட்டிப் பையனின் முகத்தில் இப்போது சிறு வருத்தம்.
கடைக்காரரின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து விரல் நீட்டிச் சொன்னான்.
"நீங்க ஒண்ணும் எனக்கு இலவசமாகக் கொடுக்க வேணாம். மற்ற நாய்க் குட்டிகளைப் போலவே இதுவும் விலை கொடுத்து வாங்கத் தகுதியானது தான்.
நான் இந்தக் குட்டிக்கு உரிய முழுத் தொகையையும் கொடுக்கிறேன்.
ஆனா, இப்போ எங்கிட்ட 2.37 டாலர்தான் இருக்கு. பாக்கித் தொகையை மாசாமாசம் 50 சென்ட்டா கொடுத்துக் கழிச்சிடறேன்."

ஆனாலும் கடைக்காரர் விடவில்லை.
"பையா... இந்த நாய்க் குட்டியால உனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை.
இதால மற்ற நாய்க்குட்டிகளைப் போல ஓடமுடியாது...
குதிக்க முடியாது... உன்னோட விளையாட முடியாது."

உடனே, அந்தப் பையன் குனிந்து தனது இடது கால் பேண்டை உயர்த்தினான்.
வளைந்து, முடமாகிப் போயிருந்த அக்காலில் ஓர் உலோகப் பட்டை மாட்டப்பட்டிருந்தது.
இப்போது அவன் கடைக்காரரை நிமிர்ந்து பார்த்துச் கொன்னான்.
"என்னாலும் தான் ஓட முடியாது... குதிக்க முடியாது. இந்தக் குட்டி நாயின் கஷ்டத்தைப் புரிஞ்சிக்கிறவங்க தான் இதுக்குத் தேவை!"

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (16-Nov-14, 8:51 pm)
Tanglish : yaar oonam
பார்வை : 232

மேலே