பிழை கண்டவர் எவரோ -கார்த்திகா

என் விழிப் பறித்துப்
புன்னகைக்கும் இளமொட்டுகள்
எந்தப் புகைவண்டியில்
தொற்றிக்கொண்டு
புவிக்கு வந்தனவோ
இந்த அதிகாலையில்
அழகழகாய்
இதழாடை உடுத்தியபடி !

இதழோடு இதழ் நெருங்கி
என்ன பேசும் இந்த மலர்ச்செடிகள்
அட!
பனித் துளிகளின்
பாதுகாப்பிற்கு
சூரியனிரண்டு கேட்கப்
போவதாய் பூக்களுக்குள்
புது மாநாடு !

வெள்ளை ரோஜாக்களை
விட்டுவிடலாம் ..
அமைதி வேண்டி
நிறம் வெளுத்த
அப்பாவிகள் அவை !

பீரங்கிச் சிறையில்
காஷ்மீரத்துச்
சிவப்பு ரோஜாக்களாம்!

ஒற்றை நிமிட
கவனக் குறைவினால்
தலை ஒடிந்த கதறல்
சின்னப் பூக்களிடமிருந்து !

கோரிக்கை முன்வைக்க
நேரமின்றி கொத்தாய்
பறிக்கப்பட்ட பூக்களுக்காக
உருகிய பனித்துளிகளின்
மரணத்தில் பயணிக்கிறது
ஊமைப் பூக்களின் மாநாடு!!

எழுதியவர் : கார்த்திகா AK (26-Nov-14, 7:41 am)
பார்வை : 271

மேலே