இந்த பழம் புளிக்கும் என்று சொல்

நண்பா, "இந்த பழம் புளிக்கும் என்று சொல். நீ ரசித்து ருசித்து அனுபவித்து சாப்பிட்டதை கசக்கும் என்று சொல்லாதே".

காதலின் பேரால் கண்ட இடங்களில் சுற்றி திரிந்துவிட்டு திருமண நாள் வந்ததும் பொருளாதார நோக்கத்தோடு சிந்திக்கின்ற உங்களைப் போன்ற நண்பர்களை எண்ணுகையில் நான் மேலானவன் என்றே நினைக்கிறேன். விரும்பியோ விரும்பாமலோ சில நேரம் வந்துவிடுகிறது காதல். யாருக்கு தெரியும் அது எப்போது முளைக்கிறது என்று?

இனம் மொழி பேதம் கடந்துதான் பிறக்கிறது காதல். பேசாமலே இருக்கும் போதும் பிடிக்க செய்கிறது மனதுக்குள். ஊர் சுற்றுகிறோம். கைகளை கோர்த்தபடி மெய் மறந்து ஒன்றாக மணல் பரப்பில் நடக்கிறோம். கடிதங்களிலும் செல்போன் காற்றலைகளிலும் காதல் குழந்தையை வளர்க்கிறோம். முத்தங்களை பரிமாறிக்கொள்கிறோம். முடிவில் நம்மையே இழந்தும் போகிறோம். யாருக்கு தெரியும் அது எப்போது பிறக்கிறதென்று?

உன் சிந்தனை ஹார்மோன்கள் சுரக்க சுரக்க போதை பிறக்க ஆரம்பித்துவிடுகிறது உனக்கு...அவளுக்கும்தான். நேரம் கடந்து விழிப்பு வரும். நேரம் பார்க்காமலேயே கனவு வரும்.

நேற்று மறைமுகமாய் சொல்லிவிட்டுப்போன வார்த்தைக்கு அர்த்தம் கேட்டு நீ அனுப்பிய எஸ்.எம்.எஸ்-கள் மோகத்தை வாரி இறைக்கும். நீ நடக்கும் தெருவெல்லாம் நதியாகும். கழுத்துவரை காதல் குளத்தின் நீர் கரைபுரண்டு ஓடும். கண்களை சுழற்றுவாய்...உன்னை சுற்றி ஆயிரக் கணக்கில் பூக்கள். மர்ம மனத்தில் மயக்கம் கவ்வி பிடிக்கும். கழுத்துக்கு கீழே முள் தண்டுகள் இருப்பதை நீ பார்த்தாயா? என்ன செய்ய போகிறாய்?

குளிர்காலம் குதப்பி குதப்பி துப்புகிறது பனி படலத்தை. ஊரே மழையில் நனைந்து கைகளை தேய்த்து கன்னத்தை சூடுபடுத்துகிறது. உனக்கு அவளை நினைத்தாலே குளிரும் மழையும் ஓடிவிடும்...அவளுக்கும்தான். காதலின் போக்கில் கடும்குளிர் தாண்டி மிதமான வெப்பம் உன்னை சுற்றி வரும். எங்கேயோ உனக்கு பிடித்த பாடல் ஒன்று கேட்கிறதாய் படும். ஊரார்கள் பார்க்கும்போதே உடலை சுற்றி கைகளை முறுக்கி சோம்பல் முறித்து எங்கோ பார்த்து புன்னகைப்பாய்.

உன் தேவைக்காய் நீ வெளியூர் அழைத்து சென்று திரும்பிய இரவுகள் பெற்றவர்களை துக்கப்படுத்தும். அரும்புகள் வெடிக்கும் முன்னமே அதை அழித்து அடையாளம் கலைத்துவிடுவாய். இப்போதும்தான்.

காதலெனும் பேரால்...நீங்கள் நடத்துகிற நாடகத்தில் யார் தான் போராளி?

அப்போதெல்லாம் தோன்றாத எதிர்கால சிந்தனை எங்கிருந்து வந்தது உனக்கு? யாரோ ஒருவனிடம் மணிக்கணக்காய் பேசி தீர்த்த நாழிகை முடியும் முன்னமே இன்னொருவனிடம் உன்னைத்தான் நான் விரும்புகிறேன் என ஞாபஹம் செய்கிறாய். அப்பாவி தருணங்கள் நம்பி தொலைத்து அடுத்தடுத்த நாட்களில் கவிதையல்லவா வடித்து அழுகிறது. நீ எப்போதோ கொடுத்துவிட்டுப் போன முத்தத்துக்காய் உனக்காகவே காத்து கிடந்தானே அவன்.

ஏதோ ஒரு திருமண சந்திப்பில் மறக்காமல் சொன்னாயாமே ஐ லவ் யூ.

எங்கிருந்து பிறக்கிறது இந்த வார்த்தை உனக்கு?... இதயத்திலிருந்தா?...
அது இருக்கிறதா உனக்கு?...

காதலெனும் பேரால்...நீங்கள் நடத்துகிற நாடகத்தில் யார் தான் போராளி?
பசிக்கு அவசர கதியில் உணவெடுப்பதை போலத்தான் நீங்கள் இளமையின் வாட்டத்துக்காய் இணைந்திருக்கிறீர்களா? உடல்களின் தேவைக்காய் காதலை பூஜிப்பதை போல் நடிக்கிறீர்களா? பொழுது போக்குக்காய் நடக்கிறதை போல காதலை அடுத்த நாளின் அந்தி தேவைக்காய் நகர்த்துகிறீர்களா?

புரிதலில் உங்களை மிஞ்ச வேறு யாரும் இல்லையென்று பேசிக் கொள்கிறார்களே...நவீன காதலின் அடையாளமல்லவா நீங்கள் இருவரும். அப்படி இருந்தீர்களாமே!

நான் இல்லையென்று சொல்லவில்லை நீ நல்லவள்தான்... அவனும்தான். ஆனாலும், எனக்கு இங்குதான் கேள்வி பிறக்கிறது. உங்கள் அகராதியில் காதலின் பேருக்கு என்னதான் அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. எல்லாவற்றையும் கடந்ததுதானே காதல். பிரசினைகளை எல்லாம் ஏற்கனவே எதிர் பார்த்ததுதானே காதல். நீ சொல்கிறபடி பார்த்தால்..."நானும் அவளும் காதலித்தோம். இப்போது எங்களுக்கு குடும்பம் தேவையாய் இருக்கிறது. பெற்றவர்களின் வார்த்தைக்கு மதிப்புகொடுக்க வேண்டாமா?".

ஆஹா, என்ன அற்புதமான் வார்த்தை. எங்கிருந்து பிறக்கிறது இந்த மௌன வார்த்தைகள். நன்றாயிருக்கிறதடா உங்கள் காதல் நாடகம். இனி என்ன செய்வதாய் உத்தேசம்? சீர் வரிசையோடு திருமணமா? நடக்கட்டும்...நடக்கட்டும். அவரவர்க்கு பிடித்த துணையோடு சொகுசு வாழ்க்கைதேடி திருமணம் செய்துவைக்கும் உங்கள் குடும்பத்தோடு இனிய இல்லறத்தில் (இல்லறம் என்னும் நாடகத்தில்) நீங்கள் மகிழ்ச்சி கடலில் திளைத்திருப்பீர்கள்.

ஆனால், உங்களை எல்லாம் எண்ணி வேதனை கடலில் திளைப்பது நாங்களாகத்தான் இருக்கும். நண்பனே/ தோழியே , இப்போதும் சொல்கிறேன் நன்றாக கேள். "இந்த பழம் புளிக்கும் என்று சொல். நீ ரசித்து ருசித்து அனுபவித்து சாப்பிட்டதை கசக்கும் என்று சொல்லாதே"!

எழுதியவர் : வரலாறு சுரேஷ் (3-Dec-14, 4:42 pm)
சேர்த்தது : வரலாறு சுரேஷ்
பார்வை : 225

மேலே