பரிணாமத்தின் நகர்தல்

பிரம்மமுகூர்த்தம் முதல்
பிறவியறிய....தினந்தேடியும்
பித்துப்பிடித்த நிலையில்
பிழையின் மொழிபாடியபடி....மனம்
"மனித உடைபூண்டு "
நயவஞ்சகத்தின் சாபமாய்
சில விலங்குகளிங்கு...
ஓர்மான் கூட்டத்தில் - பசிக்கு
ஒற்றை மானைத் துரத்தும்
மிருகங்களுக்கு மத்தியில்
மான்கூட்டத்தையே குதறித்திண்ணும்
மனித மிருகத்தின் குரூரங்கள்
எதன் எதிரொலியோ ?
எதை உணர்த்த
எதைத் தக்கவைக்க
ஏனிந்த வோட்டமோ ?
நீர்விட்டு வெளிப்படும்
நீள் மீனின் உந்துசக்தியின்
நிகரற்ற சூட்சுமத்தை
நிலையாய் உரைப்பதாரோ ?
இரைதேடி களைத்து
இல்லம் திரும்பும் பறவையின்
இனிய சுரங்களுக்கீடாய்
இனிய ராகமினி எங்கெழக்கூடும் ?
நேசத்தில் ...மீன்கள்
பாசத்தில் ... பறவைகள்
சுவாசத்தில் ... நாய்களென
பரிணாமத்தின் நகர்வாய்
மிருகங்கள் நெருங்குகின்றன
மனிதனை நோக்கி ...
மனிதன் மட்டும்
பின்னங்கால் பிடறிபட
தறிகெட்டு ...நெறிகெட்டு ...
ஓடுகின்றான் ..நாளும்
விலங்கினத்தின் கீழ்நிலை நோக்கி !
-----------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்