பாட வேண்டுமே இசை பாட வேண்டுமே

M.M.தண்டபாணி தேசிகர் இனிமை ததும்பும் பல தமிழ் பாடல்களை இயற்றி தமிழிசைக்கு வளம் சேர்த்துள்ளவர். பாடும் பாடலின் பொருளை நன்கு உணர்ந்து பாட வேண்டும் என்றும், குழலிசையும், யாழிசையும் ஒன்றாய் கூட்டி குரலையதனுள் நன்றாய் ஏற்றி, பாடும்பொழுது சுருதி விலகாமல் தாளத்துடன் பாடல் வரிகளை மூன்று தமிழின் முறை விளங்குமாறு பாடவேண்டும் என்றும் எடுத்துரைக்கிறார்.
பாடல்
பல்லவி
பாட வேண்டுமே இசை
பாட வேண்டுமே இசைப்
பாவின் பொருளை நன்குணர்ந்து (பாட)
அனுபல்லவி
ஆடுங் கூத்தன் அடியை நினைந்து
அன்பினால் அகம் கனிந்து கனிந்து (பாட)
சரணம்
குழலும் யாழும் ஒன்றாய் கூட்டி
குரலையதனுள் நன்றாய் ஏற்றி
முழவின் துணையால் தாளங்காட்டி
மூன்று தமிழின் முறையை நாட்டி (பாட)
’ஹம்சநாதம்’ ராகத்தில் அமைந்த 'பாட வேண்டுமே இசை பாட வேண்டுமே' என்று தண்டபாணி தேசிகர் இனிமையாகப் பாடும் இப்பாடலை யு ட்யூபில் கேட்டு மகிழலாம்.